சென்னை விமான நிலையத்தில்.. திரையரங்குகள் செயல்படலாமா? உயர்நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு!
சென்னை: விமான நிலையங்களில் திரையரங்குகள் செயல்படக்கூடாது என்று இந்திய விமான நிலைய ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் அமைந்துள்ள ஏரோஹப் வணிகப் பகுதியின் மல்டிபிளக்ஸ் செயல்பட்டு வருகிறது. இதில் PVR INOX திரையரங்கம் இயங்கி வருகிறது. இதனை மூட வேண்டும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்குகளை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து இரண்டு ரிட் மனுக்களை PVR INOX உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வந்தன. இவ்வழக்கில், மனுதாரரான பிவிஆர் ஐநாக்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்களான பி.எஸ். ராமன் மற்றும் சதீஷ் பராசரன் ஆகியோர் வாதிட்டனர். இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், வழக்கறிஞர் ராமசுவாமி மெய்யப்பன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும், பிவிஆர் ஐநாக்ஸுக்கும் இடையே நேரடி ஒப்பந்த உறவு இல்லை. ஏரோஹப் கட்டுமானத்திற்காக ஒலிம்பியா டெக்பார்க் (சென்னை) பிரைவேட் லிமிடெட் நிறுவிய சிறப்புப் பணி நிறுவனமான, மீனம்பாக்கம் ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் துணை உரிமம் பெற்றவர்தான் பிவிஆர் ஐநாக்ஸ்.
தற்போது இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும், மீனம்பாக்கம் ரியாலிட்டிக்கும் இடையேயான ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, பிவிஆர் ஐநாக்ஸ், இந்த சிறப்புப் பணி நிறுவனத்திடமிருந்து மட்டுமே இழப்பீடு கோர முடியும் என்றும். எங்களுக்கு எதிராக ரிட் மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
அதேபோல விமான நிலைய வளாகத்தில் சினிமா அரங்குகள் செயல்பட நாங்கள் விரும்பவில்லை என்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. 1994 ஆம் ஆண்டின் இந்திய விமான நிலைய ஆணைய சட்டத்தின் கீழ் திரையரங்கத்தை இயக்குவது அனுமதிக்கப்படாத செயல்பாடு. பிவிஆர் ஐநாக்ஸை வெளியேற்றிவிட்டு வேறு யாரையாவது கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை. எங்கள் வளாகத்தில் தியேட்டரே வேண்டாம் என்று கறாராக சொல்லப்பட்டது.
ஜி.எஸ்.டி சாலையில் இருந்து விமான நிலைய கட்டிடங்களுக்குப் பின்னால் உள்ள சுற்றுச்சுவர் வரை உள்ள பகுதி முழுவதுமே விமான நிலையமாகும். ஆனால், ஏரோஹப் கட்டிடம் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை பாதுகாக்கும் டெர்மினல் கட்டிடங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு வெளியே அமைந்துள்ளதால், அதை 'விமான நிலையம்' என்ற வரையறைக்குள் கொண்டுவரக் கூடாது என பிவிஆர் ஐநாக்ஸ் சொல்கிறது. இதையெல்லாம் ஏற்க முடியாது என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று கூறி கடந்த நவ.11ம் தேதி வழக்கை நிதிமன்றம் ஒத்திவைத்தது. இதனையடுத்து தற்போது வழக்கில் உத்தரவு வெளியாகியுள்ளது. நீதிபதி தண்டபாணி, "இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் உயர்மட்ட அமைப்பான மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், விமான நிலைய வளாகங்களுக்குள் திரையரங்குகளை அனுமதிக்கலாமா என்பது குறித்து ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் வரை, சென்னை விமான நிலையத்தில் உள்ள PVR INOX மல்டிபிளக்ஸ் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்" என்று தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications