டாஸ்மாக் மீதான ரெய்டு: அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில்,டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராக மார்ச் 25 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், வழக்கு விசாரணையை மார்ச் 25க்கு ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் அமலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை ரெய்டு
தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட, 20 இடங்களில், சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 3 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. அதில், 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 30 வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது, கொள்முதலை குறைத்து கணக்கு காட்டியது, பணியிட மாற்றம், மதுபான கூடத்துக்கு உரிமம் உள்ளிட்டவை வழங்க லஞ்சம் பெறப்பட்டது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் தங்களது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
டாஸ்மாக் தொடுத்த வழக்கு
இந்நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அமலாக்கத்துறை, எந்தவொரு மாநிலத்திலும், விசாரணை நடத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்துவதற்கு எந்தவொரு ஒப்புதலையும் பெறவில்லை. சோதனை நடவடிக்கை என்ற போர்வையில், டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை துன்புறுத்தி உள்ளனர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாநில அரசின் அனுமதியின்றி, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, கூட்டாட்சியின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் அதிகாரங்களை மீறுவதாகும். டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான அடிப்படை உரிமைகளை வெளிப்படையாக புறக்கணித்து, அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது. தன்னிச்சையான போக்குடன் செயல்படும் அமலாக்கத்துறை, டாஸ்மாக் பெண் ஊழியர்கள் உட்பட பலரை, 60 மணி நேரத்திற்கும் மேலாக, சட்ட விரோதமாக காவலில் வைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு தடை கோரும் டாஸ்மாக்
பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, அமலாக்கத் துறையின் ஈ.சி.ஐ.ஆர் எனும் வழக்கு தகவல் பதிவேட்டின் அசல் நகலை வழங்க, அமலாக்கத் துறைக்கு இடைக்காலமாக உத்தரவிட வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ, ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மார்ச் 6 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத் துறையின் சோதனையையும், அதில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என அந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
தமிழக அரசு வாதம்
இந்த மனுக்கள், இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசு தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி வாதிட்டார்.
அமலாக்கத்துறை அதிகாரத்தை மீறியுள்ளது என்றும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அமலாக்கத்துறை செயல்பட முடியாது என்றும் அவர் வாதம் வைத்துள்ளார். மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அனுமானத்தின் அடிப்படையில் கூறியுள்ளது அமலாக்கத்துறை என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்தார்.
ஐகோர்ட் இடைக்கால தடை
டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 25 வரை நடவடிக்கை எடுக்க தடை விதித்து, விசாரணையை அன்றைய நாளுக்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை ஐகோர்ட்.
அமலாக்கத்துறை பதில் அளிக்வும் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்க துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications