"கைது ஆவணத்தை செந்தில் பாலாஜி வாங்க மறுத்தது ஏன்!" சென்னை ஐகோர்ட் நீதிபதி சரமாரி கேள்வி!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், அப்போது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் சில முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.
கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அவரை கைது செய்தது. இதற்கிடையே மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்த விசாரணை சென்னை ஐகோர்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் விசாரணை நடத்தினார்.

கைது அதிகாரம்: இதில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையின் போது கபில் சிபல் சில முக்கிய வாதங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், "அமலாக்கத்துறை ஒன்றும் போலீஸ் இல்லை. அவர்களுக்குக் கைது செய்யும் அதிகாரம் இருக்கிறது என்ற போதிலும் அது போலீசுக்கு இருக்கும் அதிகாரம் போன்றது இல்லை. அமலாக்கத் துறையிடம் இருக்கும் கைது அதிகாரம் என்பது வேறு மாதிரியானது.
கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் மணி லாண்டரி தொடர்பாக ஆதாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையால் கைது செய்ய முடியும். ஒருவர் குற்றம் செய்திருக்கலாம் எனக் கருதினால் போலீசார் அவரை விசாரிக்கலாம். அதாவது ஆதாரத்தைக் கண்டுபிடிக்க விசாரணையை நடத்த முடியும். ஆனால், அமலாக்கத் துறையால் அப்படிச் செய்ய முடியாது. ஆதாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையால் கைது செய்யவும் விசாரணை நடத்தவும் முடியும்.
எப்படி கைது செய்யலாம்: செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்தவொரு ஆதாரம் இல்லாத போது அவரை எப்படி கைது செய்யலாம். அமலாக்கத் துறையில் விசாரணை நடத்த முடியுமோ தவிரப் புலன் விசாரணை நடத்த முடியாது. மேலும், அமலாக்கத் துறை தான் கைது செய்த நபரை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அப்போது ஆதாரங்களைச் சமர்ப்பித்து நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரலாம்" என வாதிட்டார்.
இங்கே குறுக்கிட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், "ஒருவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்தில் அதிகாரம் இருக்கிறது. அப்படியிருக்கும் ஆட்கொணர்வு மனுவை எப்படித் தாக்கல் செய்ய முடியும். செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் இருக்கும் போது, அவரை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத்துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்" என்று கேட்டார். இது குறித்து என்.ஆர்.இளங்கோ வாதிடுவார் என்று சொல்லி கபில் சிபல் தனது வாதத்தைத் தொடர்ந்தார்.
கபில் சிபல் வாதத்தைத் தொடர்ந்து வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றே இரு நீதிபதிகளும் தெரிவித்திருந்தனர். கைதின் போது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கும் நிலையில், அதைக் கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடுவது சட்டவிரோதம்" என்று அவர் தெரிவித்தார்.
நீதிபதி கேள்வி: அப்போது நீதிபதி கார்த்திகேயன், "கைது குறித்த காரணங்களைக் கொண்ட ஆவணத்தை வழங்கியபோது செந்தில் பாலாஜி அதை ஏன் பெற மறுத்தார்... சட்டத்தை மீறி கைது நடவடிக்கை இருந்தால், அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இழப்பீட்டைப் பெறலாம்" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு என்.ஆர்.இளங்கோ, "கைதுக்கான காரணங்களை மெயில் அனுப்பிய பிறகு திருத்தியுள்ளனர்.இது முறைகேடானது. விசாரணைக்குச் செந்தில் பாலாஜி முழுமையாக ஒத்துழைத்த போதிலும் அவர் ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள். காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்ற பிறகு, விசாரிக்க வேண்டாம் என அவர்கள் முடிவுசெய்தால் காவலைத் திரும்ப வழங்கியிருக்க வேண்டும். மாறாக நீதிபதிக்குக் காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்று மெயில் அனுப்பியிருக்கக் கூடாது" என்றார்.
இன்றைய தினம் மேகலா தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், நாளையில் அமலாக்கத்துறை வாதம் நடக்க இருக்கிறது.












Click it and Unblock the Notifications