“மொழியை திணித்தால்.. அதை என்றுமே ஏற்க மாட்டேன்” - உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால், அதை என்றுமே ஏற்க மாட்டேன் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசியிருந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
அவர் பேசியதாவது, "என் மகனுடன் நான் 'பராசக்தி' திரைப்படத்திற்கு போயிருந்தேன். படத்தை முடித்து வெளியே வந்த பின்னர், அவனிடம் நான் ஒரு கேள்வியை கேட்டேன்.

தமிழ்நாட்டில் மொழிப்போராட்டம் நடந்திருக்கிறது. அதைப்பற்றி உனக்கு தெரியுமா? என்று கேட்டேன். தெரியாது என்று மகன் பதில் சொன்னான். இதை கேட்டு நான் மிகவும் அவமானப்பட்டேன். என் கடமையிலிருந்து தவறியவனாக நான் கருதிக்கொண்டேன். அந்த மொழிப் போராட்ட வரலாறு, நாம் அனைவருக்கும் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது.
இந்த வரலாற்றை நாம் தெரிந்து வைத்திருப்பது ஏன் முக்கியம் என்பதையும் நான் சொல்லுகிறேன். ஆங்கிலம் தெரியாமல், தமிழ்நாட்டை தாண்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழன் மற்ற மொழிகளை எதிர்க்கவும் இல்லை, மாறாக இன்னமும் மற்ற மொழிகளை படித்துக்கொண்டிருக்கிறான்.
என் மொழியின் தொன்மையின் காரணமாக, எனக்கு இருக்கும் என் மொழியின் செருக்கின் காரணமாக, மற்றவர்கள் வேறு மொழியை என் மீது திணித்தால், அதை நான் என்றுமே ஏற்க மாட்டேன். நான் தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்வேன். மொழிக்கு ஒரு இழுக்கு வரும்போது, ஒரு குரல் உயர வேண்டும். எந்த கட்டத்திலும் மொழியின் அருமையை உயர்த்திப் பிடிப்பது நமது கடமை. அதை என்றும் மறவாதீர்கள்" என பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications