காவல்துறையினர் தாக்கியதில் பலியான விவசாயி! விசாரணைக் குழுவில் போலீஸ் இருக்க கூடாது - ஹைகோர்ட் அதிரடி
சென்னை: அரியலூரில் காவல்துறையினர் தாக்கியதில் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணை குழுவில், குற்றம்சாட்டப்படும் காவல்துறையினர் இடம் பெறாததை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் உள்ள போலீஸார், ஒரு வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடியுள்ளனர். அப்போது காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த போலீஸார், அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, அவரது உறவினர் கார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பிரேதப் பரிசோதனை நடத்தி அமைதியான முறையில் இறுதி சடங்குகளை நடத்த உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கானது, நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, சந்தேகம் மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், உதவி ஆய்வாளர் தான் விசாரணையை நடத்தி வருவதாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாகவும், உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததுடன், செம்புலிங்கத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் விசாரணை குழுவில் இடம் பெறாததை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.