நீர்நிலைகளில் கட்டிடம் கட்ட அனுமதி.. அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை.. சம்பளமும் போகும்
சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், குளத்தில் அரசு மருத்துவமனை, பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்படுவதாக கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதனை அகற்ற உத்தரவிட்டது. அத்துடன் நீர்நிலையில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை வெளியிடும்படி தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் தனது ஊர் சம்பந்தமாக பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சீர்காழி தாலுகா, நெம்மேலி கிராமத்தில் கரிக்குளத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் விசாரித்தார்கள். அப்போது, "நீர்நிலை என்று மனுதாரர் கூறும் இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் பழுதடைந்து விட்டதால், அதை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதே நீர்நிலையில் இன்னும் 6 கட்டிடங்கள் உள்ளன. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், "சீர்காழி அருகே உள்ள கரிக்குளத்தில் உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் 8 வாரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும். அந்த குளத்தில் புதிதாக கட்டிடம் எதுவும் கட்டக்கூடாது. தமிழ்நாட்டில் நீர்நிலைகளில் ஏராளமான அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு, நிலம் எந்த வகையானது என்பதை உறுதி செய்ய உரிய ஆவணங்களை அதிகாரிகள் பார்ப்பது கிடையாது.
எனவே, நீர்நிலையில் கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் இடிக்கப்படும்போது, அதனால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை அனுமதி வழங்கிய அதிகாரியிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். அந்த சுற்றறிக்கையை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை டிசம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications