திருமழிசை சந்தை- கொரோனா தடுப்பு நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: திருமழிசையில் அமைக்கப்படும் தற்காலிக சந்தையில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையினால் தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. சந்தைக்கு தொடர்புடைய அனைவரையும் பரிசோதனை செய்யவேண்டும், அவர்களை தனிமைப்படுத்த வேண்டும், திருமழிசையில் அமைக்கப்படும் தற்காலிக சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்பட வேண்டும் என்று கெருகம்பாக்கம் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பசத்யநாரயணா பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயம்பேடு வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை விவரங்கள், திருமழிசை தற்காலிக சந்தையில் செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள், வசதிகள் குறித்து நிலவர அறிக்கை (status report) தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் 14-ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.