திண்டுக்கல் ரத்தினம் உட்பட தொழிலதிபர்கள் மீதான அமலாக்கத்துறை மணல் குவாரி வழக்குகள் ரத்து: ஹைகோர்ட்
சென்னை: திண்டுக்கல் ரத்தினம் உட்பட தொழிலதிபர்கள் மீதான அமலாக்கத்துறை தொடர்ந்த மணல் குவாரி வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில் தொழிலதிபர்கள் மீது மணல் குவாரி வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது சட்டவிரோதம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக விமர்சித்துள்ளது.
தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதன் மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகக் கூறி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 12.82 கோடி ரூபாய் ரொக்க பணம், 56.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், சொத்து முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி,அப்துல்சலீம் மற்றும் இளம்பாரதி, விஜய்மேகநாத் ஆகியோர், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது சட்டவிரோதம், அமலாக்கத்துறையின் அதிகார வரம்புக்குள் வராது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என வாதிட்டனர்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும், மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது எனவும் கூறி, தொழிலதிபர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். அதேபோல, சொத்து முடக்கத்தையும் நீக்கியும் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications