டெண்டர் முறைகேடு:கடும் நடவடிக்கை கூடாது என உத்தரவிட கோரிய எஸ்.பி.வேலுமணி கோரிக்கை டிஸ்மிஸ்- ஹைகோர்ட்
சென்னை: டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்; இவ்வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
அதிமுக ஆட்சிக் கால டெண்டர்கள் முறைகேடுகள் தொடர்பாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை,கோவை மாநகராட்சிகளில் டெண்டர்கள் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது இந்த வழக்குகள் போடப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது எஸ்.பி.வேலுமணி தரப்பில் மனு ஒன்றுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை வாபஸ் பெறுகிறோம்; வழக்குகளை ரத்து செய்யக் கோரி குற்றவியல் பிரிவில் மனு கொடுத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தங்கள் தரப்பு மீதான விசாரணையின் போது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன் பின்னர், இவ்வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரும் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அதேபோல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது; மேலும் இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யக் கூடாது என்றனர்.
மேலும் எஸ்.பி.வேலுமணி தரப்பின் மனுவுக்கு ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications