தமிழகத்தில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து வழக்கு-ஹைகோர்ட்டில் நாளை தீர்ப்பு
சென்னை: தமிழகத்தில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக நியமனம் உள்ளிட்ட தமிழக அரசின் புதிய அர்ச்சகர் நியமன விதிகளுக்கு எதிரான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
Recommended Video
தமிழக ஆலயங்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் பணி நியமனம் தொடர்பாக 2020-ம் ஆண்டு புதிய விதிகளை இந்து அறநிலையத்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பில் அர்ச்சகராவதற்கான வயது வரம்பு 18-35 என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆகம் பள்ளியில் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் இந்த நிபந்தனைகளுக்கு எதிராக அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் மற்றும் வேறு சில அமைப்புகள், தனி நபர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், ஆகம விதிகளைக் கடைபிடிக்காமல் தமிழக அரசு கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார்களை நியமிப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இவ்வழக்குகளில் இடைக்கால உத்தரவு ஒன்றை கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. அதில் அர்ச்சகர்கள் நியமனம் என்பது வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான பெஞ்ச்சில் நடைபெற்று வந்தது.
இந்த விசாரணையின் போது குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்பது ஆகம விதி; ஆனால் அர்ச்சகர் பயிற்சி முடித்தஅனைத்து ஜாதியினருமே அர்ச்சகராக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆனால் தமிழக இந்து அறநிலையத்துறை தரப்போ, அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டர்கள் காலி இடங்களை கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், ஆகம விதிகள் பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் நியமிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தரப்பட்டது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்தது. இதனால் இந்த முக்கியத்துவம் வழக்கின் தீர்ப்புதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பெஞ்ச் நாளை இந்த வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளது.