குட்கா: உரிமைக் குழு 2-வது நோட்டீசுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் மனு- இன்று ஹைகோர்ட்டில் விசாரணை
சென்னை: சட்டசபைக்கு குட்கா கொண்டு வந்தது தொடர்பாக உரிமைக் குழு அனுப்பிய 2-வது நோட்டீசுக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடையை மீறி விற்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்த 2017-ல் சட்டசபைக்குள் குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்களை கொண்டு சென்றனர். இது சபை விதிகளுக்கு எதிரானது என கூறி திமுகவின் 21 எம்.எல்.ஏக்களுக்கும் உரிமை குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த மாதம் 25-ந் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், நோட்டீஸ் நடைமுறையில் தவறுகள் உள்ளதால் ரத்து செய்ய உத்தரவிட்டது; அதேநேரத்தில் உரிமைக் குழு விரும்பினால் புதிய நோட்டீஸ் அனுப்பலாம் எனவும் தீர்ப்பளித்தது.
இதனிடையே சட்டசபை உரிமைக் குழு மீண்டும் ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதற்கு எதிராக திமுக எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications