அதிமுக பொதுக்குழுவை யார் எப்போது கூட்டுவது? மீண்டும் எப்போது கூடும்? ஹைகோர்ட் தீர்ப்பு சொல்வது என்ன?
சென்னை: அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு சட்ட ஆணையர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது; இந்த நிலையில் இந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு நடைபெறுமா? இல்லையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னையில் ஜூலை 11-ந் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன; அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியும் ரத்து செய்யப்பட்டது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இப்பொதுகுழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். இவ்வழக்கில் முதலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றமே இவ்வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இவ்வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்தார். இன்றைய தீர்ப்பில், ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது; அதிமுகவில் ஜூன் 23-ந் தேதி என்ன நிலைமை இருந்ததோ அதே நிலைமைதான் நீடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாது என்றாகிவிட்டது.
மேலும் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாகவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொதுக்குழுவானது ஆண்டுக்கு ஒருமுறைதான் கூட்டப்பட வேண்டும் என வாதிட்டது ஓபிஎஸ் தரப்பு. தற்போது சென்னை உயர்நீதிமன்றமானது, அதிமுகவின் பொதுக் குழுவைக் கூட்ட சட்ட ஆணையர் ஒருவரை நியமித்துள்ளது; மேலும் அதிமுக விதிகளின்படி பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒரு பங்கினர் கோரிக்கை விடுத்தால் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்; பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்தே கூட்ட வேண்டும்; அப்படி ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ், பொதுக் குழுவைக் கூட்ட மறுத்தால் உயர்நீதிமன்றத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அணுகலாம் என தீர்ப்பளித்துள்ளது.
இதனடிப்படையில் ஓபிஎஸ் தரப்பு முன்வைத்த வாதத்தின் ஒரு பகுதி ஏற்கப்பட்டும் மற்றொரு பகுதி நிராகரிக்கப்பட்டும் உள்ளது. அதாவது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றது ஓபிஎஸ் தரப்பு. ஆனால் பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒரு பங்கினர் கேட்டுக் கொண்டால் பொதுக்குழுவை கூட்டித்தான் ஆக வேண்டும் என்கிறது ஹைகோர்ட். இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமான ஒரு அம்சம். அதேநேரத்தில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் இருவருமே கையெழுத்திட்டு பொதுக்குழுவைக் கூட்டலாம்; அப்படி ஒருங்கிணைப்பாளர் மறுத்தால் கோர்ட்டுக்கு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமானதுதான் என கூறப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அதிமுக பொதுக்குழு கூட்டப்படலாம்; இதற்கான நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ள ஆணையர் மேற்கொள்வார்; பொதுக்குழுவின் 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும்; அப்படி ஓபிஎஸ் மறுத்தால் ஈபிஎஸ் நீதிமன்றம் செல்வார் என்பதுதான் அதிமுக பொதுக்குழு தொடர்பான தற்போதைய நிலை.