தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் என்னவாகும்? ஹைகோர்ட்டில் இன்று விசாரணை
சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளை தடை விதிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு ஏற்கனவே தடை சட்டம் கொண்டு வந்தது. ஆனால் அச்சட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் ஆளும் திமுக அரசு, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலும் அளித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்ட அனைத்திந்திய விளையாட்டுக் கூட்டமைப்பு இவ்வழக்கை தொடர்ந்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளில் அதன் விபரீதங்கள் குறித்த எச்சரிக்கை இடம்பெற்றுள்ளது; சிறார்களுக்கு அனுமதி இல்லை என்கிற நிபந்தனைகள் உண்டு என அவ்வழக்கின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தை கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் தமிழக அரசு மீண்டும் அதே போன்ற சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ரம்மி உள்ளிட்டவை திறமைக்கான விளையாட்டு. சூதாட்டம், பந்தயம் என்பதற்கு வெளியேதான் இந்த விளையாட்டுகளைப் பார்க்க வேண்டும் எனவும் அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, பரதசக்கரவர்த்தி ஆகியொர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது இந்த வழக்கின் விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய விசாரணையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் என்னவாகும் என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications