விளையாட்டு சங்கத்தில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? சென்னை உயர்நீதிமன்றம் சுளீர்
சென்னை: விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.
தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்கத் தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வட்டெறிதல் வீராங்கனை நித்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் கடந்த ஜனவரி 19ஆம் தேதி முக்கிய உத்தரவைப் பிறப்பித்து இருந்தார்.

மேல்முறையீடு
அந்த உத்தரவில் விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை நியமிக்கக் கூடாது எனவும் நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தரப்பில் அதன் செயலாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கோபம்
அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த உத்தரவில் என்ன தவறு உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன தொடர்பு என்றும் விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை அவர்கள் பறித்துச் செல்லவே விளையாட்டு சங்கங்களுக்குள் நுழைகின்றனர் என வேதனை தெரிவித்தனர்.

மோசமாக நடத்தப்படுகிறார்கள்
அணிக்காகவும், மாநிலத்துக்காகவும், தேசத்துக்காகவும் விளையாடும் வீரர்கள் மிக மோசமான முறையில் நடத்தப்படுவதாகவும், போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும் வீரர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கு தள்ளுபடி
பயிற்சியாளர்களின் நடத்தை குறித்து நீதிமன்றத்தில் கூற முடியவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை, விளையாட்டு சங்கங்களுக்குத் தலைவராக ஏன் நியமிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்கள் ஏன் இச்சங்கங்களில் நுழைய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications