அடுத்த தலைவலி! விரைவில் உயர போகுது ஆட்டோ கட்டணம்.. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஆட்டோ கட்டணங்களைக் குறித்து தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நவ. 4ஆம் தேதிக்குப் பின்னர் பல வாரங்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை ஆனது.
உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மின்னல் வேகத்தில் அதிகரித்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனையானது.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. சென்னையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களும் கூட கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அதிக கட்டணம்
தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் எனக் கடந்த 2013ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தும்படி உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், அதிக கட்டணம் வசூலித்து பயணிகள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது தொடர்பான அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக அரசு வழக்கறிஞர்
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கடந்த 2013ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பிரிண்டர் பொருத்த அதிக செலவாகும் என்பதால் அதைப் பொருத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

திடீர் சோதனை தேவை
இதை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தியிருந்தாலும் அவை செயல்படுவதில்லை என்றும், ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகளிடம் தங்கள் விருப்பம் போலக் கட்டணம் வசூலிப்பதாகவும் குறை கூறினார். இதையடுத்து, மீட்டர் பொருத்தியிருந்தும் அவற்றைச் செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறியப் போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும்
மீட்டரை செயல்படுத்தாத ஆட்டோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பெட்ரொல் - டீசல் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால், அவற்றின் விலையின் அடிப்படையில், ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க நீண்ட நடவடிக்கையைப் பின்பற்றாமல், பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாறும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் எனவும் நீதிபதிகள், அரசுக்கு யோசனை தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications