மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளை திறக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி! சென்னை ஐகோர்ட் சொன்ன காரணம் என்ன
சென்னை: தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாகத் தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடைகளைத் திறக்க உத்தரவிடக் கோரி கட்டிட உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூன் 20ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, டாஸ்மாக் கடைகளுக்குக் கட்டிடங்களை வாடகைக்குக் கொடுத்திருந்த உரிமையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களில், கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அவற்றைத் திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்குகளை, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.
வழக்கு: விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில், குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து கட்டிடங்களை வாடகைக்கு விட்டிருந்த நிலையில் திடீரென கடைகள் மூடப்பட்டதால், பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள கடைகளை மூடுவது என விதிகள் வகுத்துள்ள நிலையில், அதை மீறி தங்கள் கட்டிடங்களில் செயல்பட்டு வந்த கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கடைகளை நடத்துவது குறித்தும், மூடுவது குறித்தும் அரசு தான் முடிவெடுக்க முடியும். கட்டிட உரிமையாளர்கள் தங்கள் குறைகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் தெரிவிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தை நாட முடியாது என வாதிட்டார்.
தீர்ப்பு: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்களுக்கும் அரசுக்குமான தொடர்பு என்பது நில உரிமையாளர் - வாடகைதாரர் உறவு தான். தனது தொழிலை மூடுவது தொடர்பாக முடிவெடுக்க வாடகைதாரருக்கு முழு உரிமை உள்ளது. அரசின் முடிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் முறையிடலாமே தவிர, வழக்கு தொடர முடியாது எனக் கூறி, வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கொள்கை முடிவில் தலையிட முடியாது: மேலும், பொது நலனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை எதிர்த்து நில உரிமையாளர்கள் வழக்கு தொடர முடியாது எனவும், கடைகளை மூடுவது குறித்து அரசு முடிவெடுக்கலாம். 500 டாஸ்மாக் கடைகளை மூடிய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனவும், நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம். இது சம்பந்தமான முறையீட்டைப் பரிசீலித்து அரசு முடிவெடுக்கலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications