நீங்க ஓட்டு போட முடியாது! ஹரி நாடார் மனு நிராகரிப்பு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டவர்களும் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களும் வாக்களிக்க முடியாது எனக் கூறி வாக்களிக்க அனுமதி கோரிய ஹரி நாடாரின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் ஹரி நாடார் அடைக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஹரி நாடாருக்கு எதிராக மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம், தடுப்புக் காவலில் உள்ளவர்கள் வாக்களிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பிரிவு 62 உட்பிரிவு 5-ன் படி, குற்ற வழக்குகளில் சட்டப்பூர்வ காவலில் உள்ளவர்களும், தண்டிக்கப்பட்டவர்களும் வாக்களிக்க இயலாது எனத் தெரிவித்தனர். இந்த சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளதால், ஹரி நாடாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது வாக்களிக்கவும் முடியாது என்பதால் ஹரி நாடார் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
யார் இந்த ஹரி நாடார்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கு 2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்த போது ராக்கெட் ராஜாவின் தலைமையிலான பனங்காட்டு படை கட்சியின் சார்பாக ஹரி நாடார் முதல்முறையாக தேர்தல் களத்தில் இறங்கினார். அந்தத் தேர்தலில் பனங்காட்டு படை கட்சி 4,243 வாக்குகளை பெற்று 3 ஆவது இடத்தை பிடித்தது.
நடமாடும் நகைக் கடை
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஹரி நாடார் களமிறங்கும் என சொல்லப்பட்டது. இதையடுத்து ஹரி நாடாரும் கழுத்தில் தங்க நகைகளை அணிந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் முதலில் இளைஞர்கள் அவரால் கவரப்பட்டனர்கள்.
இதையடுத்து நடமாடும் நகைக் கடையுடன் அவர் வீடு வீடாக வாக்கு சேகரித்தார். பனங்காட்டுப்படை கட்சியின் தலைவரான ராக்கெட் ராஜா, ஹெலிகாப்டரில் வந்து ஹரிநாடாருக்காக ஆலங்குளம் தொகுதிக்குள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனால் தொகுதிக்குள் அவருக்கான செல்வாக்கைக் கூட்டியது. அப்போது ஹரி நாடார் அந்த தேர்தலில் 37,724 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
2021 ஆம் ஆண்டு அதிமுகவின் மனோஜ் பாண்டியன் 74,153 ஓட்டுகள் பெற்று திமுகவின் பூங்கோதை ஆலடி அருணாவை தோற்கடித்தார். பூங்கோதை 70,614 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 3,539 ஓட்டுகள் வித்தியாசத்தில் பூங்கோதை, மனோஜ் பாண்டியனிடம் தோல்வியடைந்தார். இவரது தோல்விக்கு முக்கிய காரணம் ஹரி நாடாரின் ஓட்டுக்கள் என சொல்லப்படுகிறது.
பெங்களூர் சிறை
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வந்த சில நாட்களிலேயே, பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஒரு குற்ற வழக்கில் ஹரி நாடாரை கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைத்தனர்.
கேரளாவைச் சேர்ந்த ஜமாலுதீன் என்ற தொழிலதிபர் ஹரி நாடார் மீது திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் மோசடி புகார் அளித்தார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் விசாரணை கைதியாக சிறையில் இருந்து வந்த ஹரி நாடார் இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார். மேலும் நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கிலும் ஹரி நாடாருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.
ஜாமீன் கிடைக்கவில்லை
அடுத்தடுத்து ஹரி நாடார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் அவர் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்து வந்தார். இந்த நிலையில்தான் சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் களமிறங்க வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனாலும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications