தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.. சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
மதுரை: தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா, கடந்த மே மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலை விபத்தில் மரணமடைந்தார்.

இந்நிலையில், தனது மகன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, மாணவரின் தந்தை எம்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கல்லூரியில் உடன் படித்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியைக் காதலித்ததால், அந்த மாணவியின் உறவினர்கள், அடிக்கடி தனது மகனை மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், கடலூர் கல்லூரி மாணவர் மரணத்தில் ஆணவக்கொலை என்ற சந்தேகம் உள்ளதால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும்படி, குள்ளஞ்சாவடி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, சிபிசிஐடி நியாயமாக விசாரணை நடத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் ஆணவக்கொலை அதிகரித்துள்ளதாகக் கூறிய நீதிபதி, துரதிருஷ்டவசமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். ஆணவக் கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications