பங்களிப்பு ஓய்வூதியம்.. அரசு ஊழியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் குட் நியூஸ்
சென்னை: 2004-ம் ஆண்டு அரசாணையின்படி புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தற்காலிக அரசு ஊழியர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு அரசு நிதி வழங்கியது . பல வருடங்களாக வழங்கியதை திடீரென திரும்ப பெற்றது. இதையடுத்து தற்காலிக அரசு ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில், அரசு வழங்கிய பங்களிப்பு நிதியை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு 01-04-2003 முதல் தமிழ்நாடு அரசுப்பணி, அரசு கல்வி நிலையங்கள் மற்றும் அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியில் சேர்ந்தவர்களுக்கும், மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் பயன்படும் வகையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அல்லது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டப்படி தற்காலிக அரசு ஊழியர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு வழங்கப்பட்டது. ஆனால் சில வருடங்கள் கழித்து அந்தத் திட்டம் தற்காலிக ஊழியர்களுக்கு பொருந்தாது என்று கூறி நிதியை தமிழக அரசு கடந்த 2021 ம் ஆண்டு திரும்ப பெற்றது. இதனை எதிர்த்து பலரும் வழக்குத். தொடர்ந்தனர்

அப்படித்தான் தேனி மாவட்டம் செட்டியபட்டியை சேர்ந்த பாபுஜி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறையில் 2012-ல் தற்காலிகப் பணியாளராக நியமிக்கப்பட்டேன். 2004-ம் ஆண்டு அரசாணையின்படி புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எனக்கும் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கு எண் தமிழக அரசால் வழங்கப்பட்டது. மாதந்தோறும் எனது சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்புத் தொகை செலுத்திய விவரம் எனக்கு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தற்காலிக அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது. எனவே, தற்காலிக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய தொகையை திரும்பப் பெறுமாறு 2021-ம் ஆண்டில் நிதித் துறை சிறப்புச் செயலர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து, எங்கள் கணக்கில் நாங்கள் செலுத்திய தொகையையும், அரசு செலுத்திய பங்களிப்புத் தொகையையும் உரிய வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும். என்று மனுவில் கூறியிருந்தார்..
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் , "தற்காலிக ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வர மாட்டார்கள். மனுதாரர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டு விட்டார்கள். இதை அறிந்தவுடன், தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது. மனுதாரர்கள் கணக்கில் தமிழக அரசு செலுத்திய தொகையை கோர உரிமை கிடையாது" என்று வாதிட்டார்.
பின்னர் நீதிபதி மஞ்சுளா அளித்த தீர்ப்பில் , "மனுதாரர்கள் கணக்கில் ஏறத்தாழ 10 ஆண்டுகளாக செலுத்திய தொகையை தமிழக அரசு திரும்பப் பெறுவது என்பதை ஏற்க முடியாது. மனுதாரர்கள் பங்களிப்பு ஓய்வூதியத்தை உரிமையாக கோர முடியாது. ஆனால், அரசு அதிகாரிகளின் திடீர் நடவடிக்கை, மனுதாரர்களை ஏமாற்றம் அடையச் செய்கிறது . எனவே இது தொடர்பான தமிழக அரசின் நிதித் துறை சிறப்புச் செயலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மனுதாரர்கள் செலுத்திய தொகை, அரசின் பங்களிப்புத் தொகையை, உரிய வட்டியுடன் அவர்களுக்கு 4 வாரத்தில் வழங்க வேண்டும்" என்று மஞ்சுளா உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications