40 நாட்களுக்கு மேல் புழல் சிறை.. டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் அளித்த ஹைகோர்ட்
சென்னை: நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில் டி.டி.எப்.வாசன் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார் டிடிஎப் வாசன். அந்த ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும். அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, youtube தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி கூறியிருந்தார்.
இதனிடையே டிடிஎப் வாசனுக்கு நவம்பர் 9ஆம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன் இரண்டாவது முறையாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட முடியாது என கூறினார். மேலும், 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications