தேசிய நெடுஞ்சாலை நிலம் ஆக்கிரமிப்பு- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வழக்கில் ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்ததாக அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு எதிரான வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் வணிக கட்டிடங்கள், வழிப்பாட்டு தளம் உள்ளிட்டவைகளை கட்டி ஆக்கிரமித்துள்ளதாக அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு எதிராக ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆக்கிரமிப்பு
இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆதிபராசக்தி சித்தர் பீடம் செய்துள்ள ஆக்கிரமிப்பால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.மேலும் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காமல் நீர் நிலையில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைக்கு உத்தரவு
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மனுதாரர் தெரிவித்ததையடுத்து இது தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏரி ஆக்கிரமிப்பு
மேல்மருவத்தூர் ஆதிபரசாக்தி பீடத்துக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேல்மருவத்தூர் கோவிலில் வருமானம் அதிகரித்த நிலையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மெகா கட்டிடங்களுடன் உருவெடுத்தன. சோத்துபாக்கம் கீழ் மருவத்தூர் ஏரியை ஆக்கிரமித்தே இந்த கோவில் நிர்வாகத்தின் பல கட்டிடங்கள் கட்டப்பட்டன என்பது முந்தைய வழக்கு. இவ்வழக்கு விசாரணையின் போது மனுதாரரர் குறிப்பிட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் என அரசு தரப்பிலேயே ஒப்பு9க் கொள்ளப்பட்டன.

ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்
இவ்வழக்கில் சில மாதங்களுக்கு முன்னர் மேல்மருவத்தூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களின் தற்போதைய நிலை, ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 93 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த 93 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், ஆதிபராசக்தி கோவில் கட்டிடங்களும் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications