தப்பித்த கோவை பஞ்சாயத்து தலைவர்கள்.. கலெக்டர் அதிகாரம் குறித்து ஐகோர்ட் மேஜர் உத்தரவு
சென்னை: பஞ்சாயத்து தலைவர்களின் காசோலை கையெழுத்து அதிகாரம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சி தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி தவறான நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடு போன்ற காரணங்களுக்காக பஞ்சாயத்து தலைவர்களின் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க முடியாது என்றும் அதேநேரம் தவறுசெய்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு எதிராக புதிதாக நடவடிக்கை எடுக்க தடையில்லை என்றும் கூறியுள்ளது.
இந்தியாவில் நேரடியாக மக்களுக்கு அதிகாரம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் தான் பஞ்சாயத்து ராஜ் சட்டம். இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களே நேரடியாக செக்கில் கையெழுத்து போட்டு பணம் எடுக்க முடியாது. ஆனால் கிராம பஞ்சாயத்தை பொருத்தவரை காசோலை மூலம் ஊராட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்யும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே இருக்கிறது.

ஊராட்சி தலைவரின் அதிகாரம் என்பதை தாண்டி, சில பொறுப்புகள் அவருக்கு உள்ளது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்கள் கட்டாயமாக கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வேண்டும். அந்தக் கூட்டத்தில் முந்தைய 3 மாதங்களில் நடைபெற்ற வரவு-செலவு கணக்கை கட்டாயம் முன்வைக்க வேண்டும். மக்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு ஊராட்சி தலைவர் பதிலளிக்க வேண்டியது அவசியம் ஆகும். அப்போது, பல்வேறு திட்டங்களின் பயனாளிகளின் பட்டியலையும் தெரிவிக்க வேண்டும். பயனாளிகளை தேர்வு செய்ய கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
கிராம ஊராட்சி நேரடியாக வசூலிக்கும் வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி, விளம்பர வரி, நூலக வரி மூலம் வருவாய் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், குடிநீர் கட்டணம், தொழில் உரிமக் கட்டணம், கட்டிடம் அல்லது மனைப்பிரிவு உரிமக் கட்டணம், கட்டிடக் குத்தகை, சந்தைக் குத்தகை, ஒப்பந்தப்புள்ளி பதிவுக் கட்டணம், வைப்புத் தொகைகள் ஆகியவற்றின் மூலமும் வருவாய் கிடைக்கிறது. இந்த சொந்த வருவாயில் செய்யப்படும் அனைத்து செலவுகளுக்கும் கிராமசபையிடம் பஞ்சாயது தலைவர் ஒப்புதல் பெறுவது அவசியம் ஆகும். ஊராட்சி தலைவர்கள் அன்றாட பணிகள் தொடங்கி பல்வேறு பணிகளுக்கு நிதி பெற காசோலையை பயன்படுத்த முடியும்.அதுதான் அவர்களின் முக்கிய அதிகாரம் ஆகும்.
இந்நிலையில் கோவை மாவட்டம் சோமையம்பாளையம், மலுமிச்சம்பட்டி, சிக்கரசம்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டி அவர்களின் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். இதேபோல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டள்ளது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து, சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்துள்ளார்கள். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு பஞ்சாயத்துசட்டப்படி, கிராம பஞ்சாயத்துக்களில் பணிகளை நிறைவேற்றும் வகையில் காசோலைகளில் கையெழுத்திட தலைவரோ, துணைத் தலைவரோ மறுக்கும் பட்சத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இருக்கிறது.
அதேநேரம் தவறான நிர்வாகம், நிதிமுறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக காசோலைகளில் கையெழுத்திடும் பஞ்சாயத்து தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவை பிரயோகிக்க முடியாது. இந்த வழக்குகளில், கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் எந்தவொரு விளக்கமும் கோராமல் அவர்களின் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவி்ட்டுள்ளார். எனவே அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
அதேநேரம் மாவட்ட ஆட்சியர் சட்டப்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தவறு செய்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு எதிராக புதிதாக நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை. ஆனால் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க சட்டத்தில் உள்ள சூழல் அமைந்திருக்க வேண்டும் என தெளிவுபடுத்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications