"வீணாக கடலில் கலக்கும் மழை நீர்!" தமிழக அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு! சென்னை ஐகோர்ட் ஆர்டர்
சென்னை: பருவமழை காலங்களில் தமிழகத்தில் மழை போதியளவில் பெய்வதும் கூட அதை நாம் முறையாகச் சேமிக்கத் தவறுகிறோம். இதனால் பல நேரங்களில் கோடைக் காலத்தில் தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்படுகிறது. இதற்கிடையே இது தொடர்பான வழக்கில், வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாக்கும் திட்டம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை காலத்தில் அதிகளவில் மழை பொழிவதும். அவை கடலில் நேரடியாகச் சென்று கலப்பதால் அடுத்த கோடைக் காலத்தில் தண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்படுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது.

பருவமழை காலத்தில் பெய்யும் மழையைச் சேமித்து வைத்து அதைக் கோடைக் காலத்தில் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், இதற்கு முறையான திட்டங்கள் இல்லாததால் இதைச் செயல்படுத்த முடிவதில்லை. இதனால் கோடைக் காலங்களில் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் சூழலே நிலவுகிறது.
வழக்கு: இதற்கிடையே பருவமழை காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாக்கும் வகையில், சென்னையில் உள்ள ஏரிகளைச் சீரமைக்கக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் தாக்கல் செய்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கேள்வி: அப்போது, சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பருவமழை காலங்களில் வீணாகும் நீரை அருகில் உள்ள ஏரிகளுக்குத் திருப்பி விட்டு ஏன் பாதுகாக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தலைக்கு மேலே 'சிகப்பு தக்காளி’.. கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்..வெளுத்து வாங்கப் போகும் கனமழை! உஷார்
இதற்குப் பதிலளித்த தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், நீர்வளத்துக்கு எனத் தனித் துறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உபரி நீரைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
உத்தரவு: இதையடுத்து, எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பருவமழை காலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாப்பது குறித்த திட்டம் உருவாக்க வேண்டும் எனவும், அது சம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், மழை நீரை ஏரி குளங்களுக்குத் திருப்பி விடுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனக் கூறிய நீதிபதிகள், நீர்வளத் துறை உருவாக்கப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications