'கோயில் நிலங்களை எதற்கு பயன்படுத்த வேண்டும்’.. அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அறநிலையத் துறை சட்டப்படி கோயில் பயன்பாட்டைத் தவிர்த்து, பிற பயன்பாடுகளுக்காக அதன் நிலங்களைப் பயன்படுத்தக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள வையப்பமலை சுப்ரமணியசாமி கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த கோயிலுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் 10.64 ஹெக்டேர் நிலம் விவசாயம் அல்லது கோயிலுக்கு வருவாயை ஈட்டக்கூடிய கட்டுமானங்களை உருவாக்கப் பயன்படுத்தலாம் என இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கூறுகிறது.

கோயில் நிலத்திற்குப் பட்டா
ஆனால் கோயில் புறம்போக்கு நிலத்தைக் கிராம நத்தமாக மாற்றிய வருவாய்த் துறை, அந்த நிலத்தை 81 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா போட்டுக் கொடுத்துள்ளது. இதனை எதிர்த்து கோயில் சார்பில் பரம்பரை அறங்காவலர் தொடர்ந்துள்ள வழக்கில், கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை தடையில்லா சான்று பெறாமல் பட்டா வழங்கக் கூடாது என விதிகள் உள்ள நிலையில், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு
கோயில் விழா மற்றும் சடங்குகளுக்கு மட்டுமே தற்காலிகமாகப் பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் ஆக்கிரமிப்பாகத்தான் கருத வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது , வட்டாட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், பட்டா வழங்கப்பட்ட இடம் அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை எனவும், அரசு நிலம் தான் பட்டா போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தடை விதித்த நீதிமன்றம்
பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கோயிலின் நிலத்தை அதன் வருமானத்திற்கு வழிசெய்வதைத் தவிரப் பிற நோக்கத்திற்காகப் பயன்படுத்தவோ, வேறு யாருக்கும் வழங்கவோ முடியாது என அறநிலையத் துறை சட்டம் மற்றும் வருவாய்த் துறை நிலை விதிகள் உள்ளதால், அறநிலையத்துறை ஆணையரின் தடையில்லா சான்று இல்லாமல் பட்டா மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு
தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறைக்குச் சொந்தமான 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான 79 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிற பயன்பாடுகளுக்காகக் கோயில் நிலங்களைப் பயன்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சரின் அறிவிப்பு என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications