லாக்டவுன் பாதிப்பு: மலைவாழ், பழங்குடி இன மக்களுக்கு தேடிப்போய் நிவாரணம் கொடுங்க - ஹைகோர்ட்
தமிழக மலைவாழ் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கே அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திகளை சுட்டிக் காட்டி அதில் மலைவாழ் பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பழங்குடியின குழந்தைகள் வேறு வேலைக்கு செல்வதாக சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், அரசு தொடர்ந்து நான்கு மாதம் இலவச அரிசி மற்றும் 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
கொரோனா காலத்திலும் ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் கொடுக்கிறோம் - தமிழக அரசு ஹைகோர்ட்டில் தகவல்
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பழங்குடியினர் உள்ள பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும், ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.