சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை வழக்கு.. தந்தை வைத்த கோரிக்கை.. தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரவீன், ஜல்லடையான் பேட்டை பகுதியில் வசித்து வந்த ஷர்மிளா என்ற பெண்ணை காதலித்து, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பிரவீன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆணவ கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி ஷர்மிளாவும் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என இளைஞரின் தந்தை மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த கோபி என்பவருடைய மகன் பிரவீன் (26). இவர் பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஷர்மிளாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு பிரவீனும் ஷர்மிளாவும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரவீன் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள மதுபான விடுதிக்குச் சென்று மது அருந்தியபோது ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் திடீரென விடுதிக்குள் நுழைந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனை தீர்த்துக்கட்டினர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை போலீஸார் பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேரை கைது செய்திருந்தனர்.
கணவரை இழந்த சோகத்தில் வாழ்ந்து வந்த ஷர்மிளா, கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி உயிரை மாய்த்துக் கொண்டார். ஷர்மிளா சாகும் முன் எழுதிய கடிதத்தில், தன்னுடைய தற்கொலைக்கு காரணம் தனது பெற்றோரான துரை குமார் சரளா மற்றும் மற்றொரு சகோதரரான நரேஷ் ஆகியோர் தான் என்றும், தனது கணவர் இல்லாத இந்த உலகத்தில் வாழ விரும்பவில்லை என்றும், தற்கொலைக்குப் பின்னர், பிரவீனுடன் ஒன்றாக சேர்ந்து வாழப் போவதாகவும் கூறியிருந்தார்.
இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். மேலும், இந்த வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டிருக்கிறது. இந்த சூழலில் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, பிரவீனின் தந்தை கோபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், 'இந்த வழக்கில் சாட்சிகள் மிரட்டப்பட்டுள்ளதாகவும், குற்றப்பத்திரிக்கையில் சம்பவம் மறைக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் உண்மை குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்காது என்று குற்றம்சாட்டினார். மேலும் மகன் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பிரவீனின் தந்தை கோபியின் மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications