காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய பிறப்பித்த உத்தரவு ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: காஞ்சிபுரம் டிஎஸ்பி கணேஷ் சங்கரை கைது செய்ய மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷ், முதன்மை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கைது உத்தரவை ரத்து செய்துள்ளது.
வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்கு கண்டனம் தெரிவித்த மாவட்ட முதன்மை நீதிமன்றம், காஞ்சிபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் சங்கரை கைது செய்ய உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான கணேஷ் சங்கரை சீருடையில் இருந்தபடியே கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்ற ஊழியர்கள், நீதிபதியின் காரிலேயே டிஎஸ்பி கணேஷ் சங்கரை காஞ்சிபுரம் கிளை சிறைக்கு அழைத்து சென்றனர். அப்போது திடீரென தனது காரில் ஏறி கணேஷ் சங்கர் சென்றார். இதனால் அவர் தப்பி ஓடியதாக பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சற்று நேரத்தில் போலீஸ் வாகனத்திலேயே கிளை சிறைக்கு டிஎஸ்பி வந்தார்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் எஸ்.பி., டிஎஸ்பி மற்றும் வாலாஜாபாத் ஆய்வாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வது என்பது விசாரணை அதிகாரியின் அதிகார வரம்புக்குட்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும்படி உத்தரவு போட முடியாது. போலீஸ் சூப்பிரண்டை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக நிர்வாக ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே, டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications