எதுக்கு அரசியலாக்குறீங்க? பாமக சௌமியா அன்புமணி ஆர்ப்பாட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!
சென்னை: பாமக சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

ஏற்கனவே அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, மாணவர் இயக்கங்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்திற்கும் சென்னை காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மாலையில் போலீசார் விடுவித்தனர். இந்நிலையில், பாமக சார்பில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை வள்ளுவர் கோட்டம் பகுதியில் பாமக கட்சி சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் போராட்டம் நடத்த இருப்பதாக கூறி சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு மட்டும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாமக போராட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி பாமக கட்சி சார்பில் வழக்கறிஞர் பாலு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன்பு முறையீடு செய்தார்.
போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்த நீதிபதி வேல்முருகன், போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று தங்கள் மனதில் கை வைத்துக் கூறுங்கள் என்றார்.
மேலும் தொடர்ந்து நீதிபதி, "இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப் பட வேண்டும். இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கான ஏற்புடையது அல்ல. வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள். இந்த சமூகத்தில் ஆன் - பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்" என்றும் நீதிபதி வேல்முருகன் வேதனை தெரிவித்தார்.
இதற்கிடையே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாமக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications