10.5% வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணைக்கு... தடை விதிக்க முடியாது.. சென்னை ஐகோர்ட் திட்டவட்டம்
சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், இந்த சட்டத்தை அமல்படுத்தத் தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான விஜயகுமார் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேல்முறையீடு
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று முன்தினம் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தும் வகையில் அரசாணையை வெளியிட்டது. இதை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்வு முன்பு ரஜினி என்ற வழக்கறிஞர் அவசர முறையீடு செய்தார்.

ஏன் தடை விதிக்கக் கூடாது
வழக்கு நிலுவையில் உள்ளபோது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இதற்கு எதிராக வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த அரசாணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மதியத்திற்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்

தமிழ்நாடு அரசு வாதம்
அதன்படி மதியம் வழக்கு விசாரணை வந்தபோது ஆஜரான அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "இந்த சட்டம் பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தை எதிர்த்து 28 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றமும் இது தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தடை விதிக்க மறுப்பு
அதேநேரம் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது, இந்த இட ஒதுக்கீட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனவே இந்த அரசாணைக்குத் தடை விதிக்க அவசியமில்லை" என்று வாதிட்டார். இதையடுத்து அரசாணைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் வழக்கு விசாரணை ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications