தமிழக வனப்பகுதியில் அந்நிய மரங்கள் அகற்றம்.. அரசு அளித்த பதிலால் டென்ஷனான சென்னை ஐகோர்ட் நீதிபதி
சென்னை: தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவை ஒன்றைப் பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் பல அந்நிய மரங்கள் ஊடுருவி உள்ளதாக இயங்கை ஆர்வலர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால் தமிழக வனப்பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.
அதாவது வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள், அதிகளவில் தண்ணீரை உரிஞ்சிக் கொள்வதாகவும் இதனால் மற்ற மரங்களுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

அந்நிய மரங்கள்
இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்ட இருந்தது. தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அகற்றப்பட்ட இந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளைத் தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு வழங்குவது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்கத் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அரசு அறிக்கை
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அகற்றப்பட்ட அன்னிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, முதன்மை வனப் பாதுகாவலர், குழு ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கோபமடைந்த நீதிபதி
இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கடந்த முறை இது சம்பந்தமான கோப்பு நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிலையில், தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்பது நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குலைப்பது ஆகாதா எனக் கேள்வி எழுப்பினர்.

மஞ்சள் பை
இதையடுத்து, இந்த அறிக்கையைத் திரும்பப் பெறுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மஞ்சள் பை மிஷின் வைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தனித்தனி குழுக்கள்
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றுவது, கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்கு என தனித்தனி குழுக்களை அமைக்க வேண்டும் என முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications