அடுத்த பிரளயம்.. அதிமுக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை வழங்கப் போகும் தீர்ப்பு என்னவோ?
சென்னை: அண்ணா திமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை வழங்கப் போகும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், அக்கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நாளைய தீர்ப்பு என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறது.
அண்ணா திமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு ஒருவழியாக அனைத்தும் முடிந்து போய்விட்டதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நாளை மிக முக்கியமான தீர்ப்பை வழங்க இருக்கிறது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் சூரியமூர்த்தி ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் உட்பட அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்க கோரியிருந்தார் சூரியமூர்த்தி. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக 4 வாரங்களில் முடிவெடுக்க கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதனால் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தங்களது தரப்பு வாதங்களை மனுக்களாக தாக்கல் செய்தனர். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த முறையீட்டு மனுவில், அதிமுகவில் உறுப்பினராகவே இல்லாதவர்கள் எப்படி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்ககு வந்தது. அப்போது, அதிமுகவில் எந்த பிளவும் இல்லை; ஏன் தேர்தல் ஆணையம் இத்தகைய விசாரணையை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையமோ, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால்தான் விசாரணை நடத்தினோம் என்றது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரவீந்தரநாத் தரப்பும் வாதங்களை முன்வைத்திருந்தது. அனைத்து தரப்பு வாதஙளையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் பிப்ரவரி 12-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தனர்.
தற்போது அதிமுகவில் மூத்த தலைவர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை வழங்க இருக்கும் தீர்ப்பு, அதிமுகவில் புதிய பிரளயத்தை ஏற்படுத்துமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications