ஆளுநரை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு.. "விசாரணைக்கு உகந்ததல்ல" தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: ஆரோவில் அறக்கட்டளை தலைவராக ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய கோரிய தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என். ரவி, ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவ்வாறு ஆதாயம் தரும் இரட்டைப் பதவியை வகிப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
“லிஸ்டு” போட்ட ஆளுநர் ரவி.. பறக்கும் வாழ்த்துகள்! அரசியலா? - சு.வெங்கடேசனுக்கு வந்த “டவுட்டு”
இரட்டைப் பதவி
அந்த மனுவில், "ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்திய அரசியல் சாசனம் 158 (2)-வது பிரிவின்படி, ஆளுநராக பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளை வகிக்க கூடாது என்பது விதி. எனவே, ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே, ஆர்.என்.ரவி, ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதியிழப்பு ஆகிறார். எனவே அவரை ஆளுநர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என கோரப்பட்டது.
ஆளுநர் செயல்பாடுகள்
இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாது என அரசியல் சாசனம் சட்டப் பாதுகாப்பு வழங்கியுள்ளது. எனினும், அது ஆளுநர் என்ற பதவியின் செயல்பாடுகள் தொடர்பானது தான்.
மனுதாரர் வாதம்
தனிப்பட்ட முறையில் அவரது செயல்பாடுகள் தொடர்பாக வழக்கு தொடர முடியும். மேலும், ஆதாயம் தரும் பதவி வகிக்கும் ஆளுநர் ரவி, சட்ட விதிகளின்படி ஆளுநர் பதவியில் நீடிக்கிறாரா என விளக்கமளிக்க வேண்டும். சட்ட விதிகளுக்கு முரணாக பதவியில் நீடிப்பதாக இருந்தால் அவரை தகுதி நீக்கம் செய்யலாம் என மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது.
இன்று தீர்ப்பு
மேலும், பல மாநிலங்களில் ஆளுநர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கட்டுப்பட்டவர்கள் அல்ல
தீர்ப்பை வழங்கிய பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வானது, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், பதவியில் இருக்கும் குடியரசு தலைவரோ, ஆளுனர்களோ நீதிமன்றங்களுக்கு பதில் சொல்ல கட்டுப்பட்டவர்கள் அல்ல என தெளிவுபடுத்தினர்.
வழக்கு தள்ளுபடி
இரட்டை பதவி வகிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என உத்தரவிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.