அதிமுக பொதுச்செயலாளர் பதவி- ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது.
அதிமுகவின் 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் அணி தரப்பில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனி நீதிபதி தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்தார். இதற்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

ஓபிஎஸ் அணியின் மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, அதிமுகவில் தற்போது எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என கூறி வழக்கு விசாரணை ஏப்ரல் 20-ல் நடைபெறும் என ஒத்திவைத்தனர்.
பின்னர் ஏப்ரல் 16-ந் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யபப்ட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்ப்பட்டது. இந்த மனு மீதும் விவாதம் நடத்தப்பட்டது. இவ்வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.மணிசங்கர், வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆகியோர், ஈரோடு இடைத்
தேர்தலின்போது எங்களுடன் கலந்துபேசுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இபிஎஸ் அணி அப்படி நடந்து கொள்ளவில்லை. அதேபோல செயற்குழு கூட்டத்துக்கும் அழைப்பு அனுபவில்லை என சுட்டிக்காட்டினர். ஆனால் இபிஎஸ் அணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேறு- கர்நாடகா தேர்தல் வேறு என கூறினார். அதிமுக சார்பாக விஜய் நாராயணன் வாதிடுகையில், ஓபிஎஸ்-க்கு 4 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தான் இருக்கிறது. ஆனால் இபிஎஸ்-க்கு 2,500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது என வாதிட்டார்.
பின்னர் அனைத்து அப்பீல் மனுக்கள் மீதும் ஏப்ரல் 20, 21-ல் விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications