மதுரை ஆதினத்தின் கார் மீது மோதிய கார்.. முன் சீட்டில் ‘அந்த’ நபர்! விசாரணை கேட்கும் இந்து முன்னணி
சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற மதுரை ஆதீனத்தின் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆதீனத்தைக் கொல்ல சதி நடப்பதாக திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்திருந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் ஐந்தாம் தேதி வரை அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் ஜேபி நட்டா, தமிழ்நாடு ஆளுநர் ரவி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆதீனங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் நேற்று தனது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது அவர் கார் மீது மற்றொரு கார் மோதியது. இதில் காரின் பின்பகுதி சேதம் அடைந்த நிலையில் அதே காரில் ஆதீனம் சென்னை புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் இந்த விபத்தில் சதி இருக்கலாம் என திருவாவாடுதுறை ஆதீனம் கூறியிருந்தார். இதற்கிடையே இன்றைய நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம் கார் விபத்தில் சிக்கிய போது மதுரை மீனாட்சி அருளால் தான் பிழைத்ததாகவும், இதில் தன்னை கொல்ல சதி இருப்பதாக கூறியிருந்தார். இதேபோல தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தலைவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இது சதி எனவும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த நிலையில் மதுரை ஆதீனத்தை கொல்ல சதி நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இன்று மதியம் தவத்திரு மதுரை ஆதீனம் அவர்கள் பயணம் செய்த கார் மீது உளுந்தூர்பேட்டை அருகில் விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. விபத்தினை ஏற்படுத்தியது பழைய வெள்ளை நிற வாகனம் என்றும், அதன் முன், பின் பக்கங்களில் வாகன எண் பிளேட் இல்லை என்று தெரிய வருகிறது.
மேலும் காரில் குல்லா போட்ட நபர் முன் இருக்கையில் இருந்துள்ளார். மேலும் வேகமாக வந்த அந்த கார் தடுப்பு பேரீகார்டு அருகில் வந்து திரும்பி தாக்குவதற்கு முயற்சித்துள்ளது. அதிருஷ்ட வசமாக இறைவன் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் அருளால் சுவாமிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என தவத்திரு திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள் கவலை தெரிவித்து உள்ளார். சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற கொடூர சம்பவம் குறித்து சுவாமிகள் மன வருத்தத்துடன் தெளிவான கருத்தினை உறுதியாக தெரிவித்து இருந்தார்.
எனவே இவற்றை காவல்துறை கவனத்தில் கொண்டு இந்த விபத்து குறித்து முழுமையான தகவலை திரட்ட வேண்டும். மேலும் முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு இட வேண்டும். சுவாமிகளுக்கு தக்க பாதுகாப்பை உடனடியாக அளிக்க தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications