மதுரை ஏர்போர்ட் சர்வதேச விமான நிலையமாகிறது.. தேர்தல் நேரத்தில் மத்திய அரசு ஒப்புதல்
சென்னை: தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருந்த கோரிக்கைய மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய கேபினட் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விமான நிலையத்தில் உள்கட்டமைப்புகள் சர்வதேச தரத்தில் மாற்றப்படும்.
மதுரை விமான நிலையத்தை தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்தான், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படுவதன் மூலம் தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சிக்கு அடுத்தபடியாக மிகவும் பிசியான ஏர்போர்ட்களில் ஒன்றாக மதுரை விமான நிலையம் உள்ளது. 1942 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மதுரை விமான நிலையம் தென் தமிழகத்தில் உள்ள பயணிகளுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.
பயணிகளுக்கு பலன் அளிக்கும்
சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த விமான நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். தொழில் நிமித்தமாகவும், மருத்துவ காரணங்களுக்காகவும் தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகிறார்கள்.
சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தினால், விமான நிலையத்தில் உள்கட்டமைப்புகள், புதிய முனையங்கள், ரன்வேக்கள் உள்ளிட்டடைகள் மேம்படுத்தபடும். பயணிகளுக்கான சேவையும் நவீன தரத்தில் மாற்றியமைக்கப்படும். பயணிகள் காத்திருப்பு நேரம் உள்ளிட்டவையும் குறைக்கப்படும் என்பதால், பயணிகளுக்கும் பெரும் பயனளிக்க கூடிய ஒன்றாக இருக்கும்.
வெளிநாடு விமான நிறுவனங்களும்
தமிழகத்தில் தென்பகுதிகளை குறிவைத்த்து தற்பொது தொழிற்சாலைகள் அதிகம் துவங்கப்பட்டு வரும் நிலையில், மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தற்போது மதுரை விமான நிலையம் என்பது கஸ்டம்ஸ் ஏர்போர்ட் என்ற விமான நிலைய பிரிவின் கீழ் உள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் மட்டுமே மதுரை விமான நிலையத்தில் இருந்தும், வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கும் சர்வதேச வழித்தடங்களில் விமானங்களை இயக்க முடியும்.
சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் பட்சத்தில், வெளிநாட்டை சேர்ந்த விமான சேவை நிறுவனங்களும் இனி நேரடியாக மதுரைக்கு விமானங்களை இயக்க முடியும். இதனால் வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமான நிறுவனங்களே இனி மதுரைக்கு நேரடியாக இயக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பிரதமர் மோடி ட்வீட்
மத்திய கேபினட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மோடி தனது பதிவில் கூறியிருப்பதாவது;- மத்திய அமைச்சரவை மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த முடிவு, குறிப்பாக தென் தமிழ்நாட்டில் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்க உதவும். பழங்கால பண்பாடு மற்றும் ஆன்மிக பாரம்பரியத்திற்காக புகழ்பெற்ற நகரமான மதுரை, இதன் மூலம் உலகளாவிய தொடர்புகளை மேலும் வலுப்படுத்த உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
தேர்தலை மனதில் வைத்தே..
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதை மனதில் வைத்தே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு குறிப்பிடும் படியாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இதை அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன.
குறிப்பாக முதல்வர் ஸ்டாலினும் தேர்தல் நேரத்தில் கூட பாஜக தமிழக மக்களுக்கான எந்த திட்டத்தினையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.. பிறகு எப்படி உங்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் தான், தேர்தல் அறிவிப்புக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications