கனவாக கலைகிறதா கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள்! பட்ஜெட்டில் வாய் திறக்காத நிர்மலா சீதாராமன்
சென்னை: மோடி 3.O அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படட் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து இதில் எந்த அறிவிப்பும் வெளியாகாதது பெரும் ஏமாற்றமளித்துள்ளது என்று தமிழக மக்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
மெட்ரோ: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கடந்த 2015ல் தொடங்கப்பட்டதுதான் இந்த சென்னை மெட்ரோ அமைப்பு. இது தற்போது புளூ லைன் 1 மற்றும் கிரீன் லைன் 2 என இரண்டு பயன்பாட்டு மெட்ரோ பாதைகளையும் மூன்று கட்டுமானப் பாதைகளையும் கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் இதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மெல்ல இந்த எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்தது.

விடுமுறை: இதனால் பெண்களுக்கு முக்கியத்துவம், விழா கால சலுகை மற்றும் கூடுதல் ரயில்கள் என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தது. எனவே சென்னை மக்களின் வாழ்க்கையில் மெட்ரோ ரயில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்து வருகிறது.
கூடுதல் வழித்தடம்: மெட்ரோ சேவையின் தேவை அதிகரித்திருப்பதால் மேலும் சில வழித்தடங்களில் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கின்றன. அதாவது, பர்பிள் லைன் எனப்படும் மூன்றாவது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டுமாணம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இது சிறுசேரி சிப்காட் II-லிருந்து மாதவரம் பால் பண்ணை வரை செல்லும். இந்த வழித்தடங்களில் மொத்தம் 48 நிலையங்கள் இருக்கும்.
ஆரஞ்சு வழித்தடம்: இவற்றில், 29 நிலத்தடியிலும், 19 உயர்மட்டமாகவும் அமைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து,ஆரஞ்சு லைன் 4 வழித்தடமும் கட்டுமானத்தில் உள்ளது. இது கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் வரை செல்லும். இந்த பாதையில் 28 நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த நிலையங்களில், 10 நிலத்தடியிலும், 18 உயர் மடத்திலும் அமைக்கப்படுகின்றன. ஆரஞ்சு வழித்தடத்தின் மொத்த நீளம் 26 கிமீக்கு மேல் இருக்கும்.
ரெட் லைன்: இறுதியாக ரெட் லைன் 5 வழித்தடமும் கட்டுமானத்திற்கு தயாராகி வருகிறது. மாதவரம் பகுதியை சோழிங்கநல்லூர் பகுதியுடன் இணைக்கும் இந்த முக்கிய மெட்ரோ பாதையில் மொத்தம் 48 மெட்ரோ ரயில் நிலையங்கள் இருக்கும். இதில் 41 நிலையங்கள் உயர்மட்டத்திலும், 1 தரைநிலை மற்றும் 6 நிலையங்கள் நிலத்தடியிலும் அமைக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.
இந்த வழித்தடம் மாதவரத்தில் தொடங்கி வில்லிவாக்கம், கோயம்பேடு மார்கெட், விருகம்பாக்கம், கோவிலம்பாக்கம் என சுற்றி இறுதியாக சோழிங்கநல்லூர் வந்தடைகிறது. இதில் ஓஎம்ஆர் வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மெட்ரோ பணிகள் 2027ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு தற்போது வரை விடுவிக்கவில்லை. இந்த பட்ஜெட்டில் இதற்கான நிதி விடுவிக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், நிர்மலா சீதாராமன் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சென்னையில் மெட்ரோவுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றன. இதற்கான ஒப்புதலும், நிதியும் இந்த பட்ஜெட்டில் விடுவிக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இது குறித்து கடந்த 21ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வலியுறுத்தலை முன்வைத்திருந்தார். அதாவது,
3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்
பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல்
தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல்
என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்" என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.











Click it and Unblock the Notifications