"நானா மிரட்டினேன்.. எல்லா சமூகமும் எனக்கு ஒன்றுதான்.. எல்லாமே வீண் பழி".. மூர்த்தி எம்எல்ஏ விளக்கம்
மதுரை திமுக எம்எல்ஏ தன்னிலை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: "எல்லா சமூகத்தினரையுமே சமமாக பாவித்து நேசிக்கும் திராவிட இயக்க பண்பாட்டில் ஊறியவன் நான்.. வெறுப்புணர்வுக்கு இடமே தந்ததில்லை... குறிப்பிட்ட சமூகத்தை தரக்குறைவாக நான் பேசவுமில்லை.. ஒரு பகுத்தறிவாளனாக மக்கள் பணி செய்து கொண்டு வருகிறேன்.. எல்லாமே வீண்பழி.. பொய்யான குற்றச்சாட்டு" என்று மதுரை திமுக எம்எல்ஏ மூர்த்தி ஒரு தன்னிலை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன்.. இவர் ஒரு டாக்டர்.. சமூக விவகாரங்களில் அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டி வருபவர்.. தவறு எங்கே நடந்தாலும் தைரியமாக சுட்டிக் காட்டுபவர்.
சில காலமாகவே மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ மூர்த்தி ஊழலில் ஈடுபட்டதாக சில புகார்களை கூறி வந்துள்ளார்.. அப்படி ஒரு புகாரை ஆதாரத்துடன் 4 நாட்களுக்கு முன்பு இவர் வெளியிடவும், எம்எல்ஏ மூர்த்திக்கு எரிச்சலை உண்டுபண்ணியது.

சங்கரபாண்டியன்
இதையடுத்து, சங்கரபாண்டியன் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து, செருப்பை கழட்டி, சங்கரபாண்டியன் மனைவியையும் அடிக்க பாய்ந்துள்ளார்.. இது சம்பந்தமான தன்னுடைய சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்த சிசிடிவியை ஆதாரமாக கொண்டு, பாஜக ஊமச்சிகுளம் போலீசில் புகார் தந்தது. அதனடிப்படையில் மூர்த்தி மீது 5 பிரிவுகளில் போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.

அறிக்கை
இந்நிலையில், எம்எல்ஏ மூர்த்தி தன்னிலை விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் அவர் சொல்லி உள்ளது இதுதான்: "என் உயிரினும் மேலான உறவுகளே... உங்களில் ஒருவனாகிய பி.மூர்த்தி எனும் நான் திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளேன்.. நான் 41 ஆண்டுகளுக்கும் மேலாகத் திராவிட இயக்கக் கொள்கை பற்றுடன் ஒரு பகுத்தறிவாளனாக மக்கள் பணி செய்து கொண்டு வருகிறேன்.

சாதி, மதம்
நான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருடனும் அன்புடன் பழகுபவன் என்பது, என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்... இந்த நிலையில் நான் செய்யாத குற்றத்தைச் செய்ததாக பொய்யான பழியை என் மீது அரசியல் லாபத்திற்காகச் சிலர் சுமத்த முயன்றனர். என்மீதான அந்தக் குற்றச்சாட்டு உண்மையானதல்ல என்பது குறித்த விளக்கத்தை மாற்றுக்கட்சி நிர்வாகியிடம் எடுத்துரைக்கச் சென்றேன். அங்கு நான் கூறாத, கனவிலும் பேச நினைக்காத வார்த்தைகளைப் பேசியதாகக் கூறி, முற்றிலும் அவதூறான செய்தியைச் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர்.

திராவிட இயக்கம்
என்னைப் பொறுத்தவரை, அனைத்து சமூகத்தினரையுமே சமமாகப் பாவித்து நேசிக்கும் திராவிட இயக்கப் பண்பாட்டில் ஊறியவன் என்பதால், எந்த நிலையிலும் என்மனதில் வெறுப்புணர்வுக்கு இடமே தந்ததில்லை. நான் குறிப்பிட்ட சமூகத்தைத் தரக்குறைவாகப் பேசினேன் என்பது, ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டு என்பதை இதன் மூலம் என் அன்பார்ந்த உறவுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Recommended Video

அரவணைப்பு
இப்போது மட்டுமின்றி, என் வாழ்நாளில் எப்போதுமே அதுபோன்ற சிந்தனைக்கோ, பேச்சுக்கோ இடமிருக்காது என்பதையும் உறுதிபடக் கூற விரும்புகிறேன்... அன்பே எனது வழி. அரவணைப்பே எனது வாழ்க்கைமுறை. உங்களில் ஒருவனான நான் உங்களுக்காக என்றும் உழைப்பேன். உறுதுணையான உறவாக தொடர்வேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications