இபிஎஸ்ஸின் ஈர்ப்பு.. அதிமுகவில் இணைந்த கையோடு திமுக மீது சரவணன் ‛அட்டாக்’.. இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: பாஜக சார்பில் அக்டோபரில் மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதையடுத்து மதுரை டாக்டர் சரவணன் இரவோடு இரவாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கோரிய நிலையில் பாஜகவில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் திடீரென்று இன்று எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிலையில் திமுக மீது கடுமையாக அட்டாக் செய்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் டாக்டர் சரவணன். இவர் மதுரையில் மருத்துவமனை நடத்தி வரும் நிலையில் பாஜகவில் கடந்த ஆண்டு இணைந்து செயல்பட துவங்கினார்.
கடந்த அக்டோபரில் மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இரவு பழனிவேல் தியாகராஜனை அவரது வீட்டில் சந்தித்த டாக்டர் சரவணன் மன்னிப்பு கோரினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதிமுகவில் இணைந்த சரவணன்
இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக அவர் எந்த கட்சியிலும் சேராமல் இருந்தார். விரைவில் அவர் மீண்டும் திமுகவில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் தான் இன்று சரவணன் சென்னையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தன்னை கட்சியில் இணைத்து கொண்டார். திமுகவில் இணைவார் என கூறப்பட்ட நிலையில் அவர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இந்நிலையில் தான் அதிமுகவில் இணைந்த மதுரை சரவணண் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுகவை வலுப்படுத்த..
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் அதிமுகவில் இன்று என்னை இணைத்து கொண்டேன். வரும் காலங்களில் அதிமுகவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்படுவேன். நான் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து வெளியேறினேன். மதுரையில் நடந்த செருப்பு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பாஜகவில் இருந்து வெளியேறினேன். இந்த காலத்தில் மீடியாக்களில் நான் பல கட்சிகளுக்கு செல்வதாக செய்திகள் வெளியாகின. தனிக்கட்சி துவங்குவதாக கூட கூறினர்.

திமுக மீது அட்டாக்
பொதுவாக ஒரு ஆட்சி மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு தான் அதிருப்தி என்பது தெரியவரும். ஆனால் திமுக ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை ஓராண்டிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியே பரவாயில்லை என பேசும் நிலை தான் இருக்கிறது. இந்த 2023ல் இருந்து அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்பட உள்ளேன். மதுரையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்கள். செல்லூர் ராஜூ, ஆர்பி உதயக்குமார், ராஜன் செல்லப்பா ஆகியோரின் ஆலோசனையின்பேரில் கட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் செயல்பட உள்ளேன்'' என்றார்.

அதிமுகவில் இணைய காரணம் என்ன?
இந்த வேளையில் அதிமுகவில் சேர்ந்ததற்கான காரணம் என்ன? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சரவணன், ‛‛மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இதற்காக ஒரு இயக்கம், பிளாட்பார்ம் வேண்டும். புதுவருடம் வரட்டும் என காத்திருந்து அதிமுகவில் இணையும் முடிவை எடுத்துள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி எதார்த்தமான நபர். மக்கள் எளிதில் அணுகக்கூடிய நபராக இருக்கிறார். சட்டசபையில் அவரது செயல்பாட்டை நான் பார்த்திருக்கிறேன். இப்போது பொதுமக்களும் கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு சப்போர்ட்டாக பேசக்கூடிய சூழல் இருக்கிறது. அதனால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்துள்ளேன்'' என பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications