“பக்கத்துல கேரளா இருக்கு”.. அமித்ஷா பேச்சை கண்டித்த எம்பிக்கு சம்மன்! சு.வெங்கடேசன் கண்டனம்
சென்னை: அமித்ஷாவை விமர்சித்ததாக கூறி கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்பி ஜான் பிரிட்டாசுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கும் நிலையில், ஜனநாயகத்தை நேசிக்கிற ஒவ்வொருவரும் ஜான் பிரிட்டாஸுடன் இணைந்து நிற்போம் என்று மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்பி சு வெங்கடேசன் எச்சரித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், "மோடி தலைமையிலான பா.ஜ.க தான் கர்நாடகாவை பாதுகாக்க முடியும். பக்கத்தில் கேரளா இருக்கிறது. அதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மங்களூர் பேரணியில் பேசியுள்ளார்.

"பெரும்பான்மை வாதத்தை" உறுதியாக நிராகரிக்கும் மக்களைக் கொண்ட கேரளா பற்றி அவர் மோசமாக பேசுவது முதல் முறையல்ல. அதிக கல்வியறிவு கொண்ட மாநிலத்தை இழிந்து பேசுகிற பாஜக தலைவரும் இவர் மட்டுமல்ல என்று சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் அமித்ஷாவின் உரைகுறித்து கட்டுரை எழுதி உள்ளார்.
மேலும் இப்படி தேசத்து மக்களிடையே பகையை தூண்டுவது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ இன் படி குற்றம். இப்படி அடிக்கடி கேரளா மீது பாய்வது அவர்களின் இந்து ராஷ்டிரா இலக்கு நோக்கிய அவசரத்தினால்தான். ஆனால் பாஜகவின் சதிகளை கேரளா தளர்வின்றி எதிர்த்து வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

ஜான் பிரிட்டாஸின் கூற்று தேச துரோகமானது என கேரள பாஜக செயலாளர் பி.சுதிர் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் மீது தோழர் ஜான் பிரிட்டாஸ் அவர்களுக்கு "சம்மன்" அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டு உள்ளார். பாசிச மனோபாவம் கொண்டவர்களின் பசிக்கு நியாயங்கள்தான் ருசியாக இருக்கும் போல...
அமித்ஷா மீது புகார் வருகிறது என்றவுடன் அதைத் தடுக்க துடிக்கிறார்கள். இப்படி திசை திருப்பி விடுகிறார்கள். மாநிலங்களவையின் மிகச்சிறந்த பங்களிப்பாளர் தோழர். ஜான் பிரிட்டாஸ். அவர் மீதான புகார் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாயை அடைக்க முயற்சிக்கும் இவர்கள் நாளை நாட்டையே ஜனநாயக இருளில் ஆழ்த்தி விடுவார்கள்.

"கர்நாடகத்தை அடுத்து கேரளம்" இருக்கிறது என எச்சரிக்கும் அமித்ஷாவுக்கு நாங்கள் சொல்வோம் மாநிலங்களின் சகோதரத்துவத்தை வாக்குவங்கிக்காக பலிகொடுத்தும் அற்ப அரசியலுக்கு எதிரான போரில் கேரளத்துடன் தமிழகம் இணைந்து நிற்கும். ஜனநாயகத்தை நேசிக்கிற ஒவ்வொருவரும் ஜான்பிரிட்டாஸுடன் இணைந்து நிற்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications