20 லட்சம் மக்கள்தொகை இல்லை.. ஆனாலும் வட இந்திய நகரங்களில் மெட்ரோ-விற்கு மத்திய அரசு அனுமதி.. லிஸ்ட்!
சென்னை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே 20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று கூறிய தமிழக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக கூறப்படும் நிலையில், 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
கோவை மாவட்டத்திற்கு ரூ.10,740 கோடியில் 34.8 கிமீ தொலைவுக்கும், மதுரையில் ரூ.11,368 கோடியில் 32 கிமீ தொலைவுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறது. இந்த திட்ட அறிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது இரு மாவட்டங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மக்கள் தொகை 20 லட்சம் வரை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள் தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி கொடுக்க முடியாது என்றும் மத்திய அரசு திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பேசுகையில், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை. அதுதொடர்பாக மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக பதில் அளிக்கப்படும். அதேபோல் மக்கள் தொகை அடிப்படையில் திட்டத்தை நிறுத்த வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 20 லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக இருக்கும் இடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த பல்வேறு நேரங்களில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் 16 லட்சம் மக்கள் தொகை இருந்த போதும், அங்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளித்து, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் மத்தியப் பிரதேச மாநில போபால் நகரில் 18 லட்சம் மக்கள் தொகையே இருந்த போதும், அங்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் 17 லட்சம் மக்கள் தொகை இருந்த போதும், மெட்ரோ ரயிலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் மீரட், ஒடிசா மாநில புவனேஷ்வர், ஹரியானா மாநிலம் குருகிராம், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மற்றும் புனே, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர், குஜராத் மாநிலம் சூரத் மற்றும் கேரளா மாநிலம் கொச்சி நகரங்களில் குறைவான மக்கள் தொகை இருந்த போதும், மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications