ராஜ்பவன் என்ன பெயிலானவர்கள் படிக்கும் டுடோரியல் காலேஜா? - தமிழிசைக்கு சு.வெங்கடேசன் கேள்வி!
பரீட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டு மக்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை ஆனால் மத்திய அரசு எங்களை அங்கீகரித்து ஆளுநர் பதவி அளித்தது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கருத்துக்கு, சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா என ஆளுநர் தமிழிசைக்கு கேள்வி எழுப்பியுள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.
தேர்தல்களில் தான் தோல்வியடைந்த நிலையில், மத்திய அரசு தனது திறமையை அங்கீகரித்து ஆளுநர் பதவி கொடுத்ததாக தமிழிசை சௌந்தரராஜன் பேசியதற்கு எதிர்வினையாற்றியுள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி.

மத்திய அமைச்சர்கள் ஆகியிருப்போம்
தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோர் உள்துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எங்களைப் போன்ற நிர்வாகத் திறன் கொண்டவர்களையும், எங்களைப் போன்ற திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

எங்கள் திறமை
தமிழ்நாட்டு மக்கள் எங்களை அடையாளம் கண்டிருந்தால் நாங்கள் எம்.பிக்கள் ஆகி நாடாளுமன்றம் சென்றிருப்போம். மத்திய அமைச்சர்கள் ஆகியிருப்போம். ஆனால் தோற்கடிக்கப்பட்டதால், எங்களின் திறமையை அறிந்த மத்திய அரசு, அதனை வீணடிக்க வேண்டாம் என கருதி ஆளுநர்களாக ஆக்கி வருகிறது. எங்களைப் போன்ற திறமை மிக்கவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக வைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

சு.வெங்கடேசன் கேள்வி
தமிழிசை சௌந்தரராஜன் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே.. பரீட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

தேர்தலில் வென்றதில்லை
2006 ஆம் ஆண்டு முதல் 2 சட்டசபைத் தேர்தல்களிலும், 2 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் என 4 முறை போட்டியிட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் ஒருமுறை கூட வென்றதில்லை. தமிழ்நாடு பாஜக தலைவராக 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு காலம் பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன், 2019 எம்பி தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக 2021 ஆம் ஆண்டு கூடுதல் பொறுப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications