மாணவர் சேர்க்கையே ஆகஸ்ட்டில் தான்..ஆனால் வசூல் மட்டும் ஏப்ரல் மாதத்தை கணக்கிட்டா?சு வெங்கடேசன் சாடல்
சென்னை: 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையே ஆகஸ்ட்டில் தான் தொடங்கியுள்ள நிலையில், கேந்திரிய வித்யாலயாவில் ஏப்ரல் மாதத்திலிருந்தே கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவது நியாமற்றது என்றும் மத்திய அமைச்சர் இதில் தலையிட்டு கட்டணத்தைத் திருப்பி தர வேண்டும், இல்லாவிடில் எதிர்கால கட்டணத்தில் நேர் செய்ய வேண்டும் என மதுரை எம்பி சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்
கடந்த ஏப்ரல் மே மாதத்தில் 2ஆம் அலை ஏற்பட்டதால் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. பருவ தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த முடிவும் தாமதமாகவே வெளியானது. கொரோனா குறைந்ததை தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் தான் 11ஆம் வகுப்பின் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் சேர்ந்துள்ள நிலையில், அவர்களுக்குக் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டியூசன் கட்டணம் உள்ளிட்டவை கணக்கிட்டு வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

சு. வெங்கடேசன் ட்வீட்
இந்நிலையில் இது குறித்து மதுரை எம்பி சு. வெங்கடேசன் தனது ட்விட்டரில், "11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தான் நடைபெற்றது. ஆனால் ஏப்ரல் மாதத்திலிருந்தே கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 4 மாதக் கட்டணம் ரூ 3150 ஐ திருப்பித்தாருங்கள், அல்லது நேர் செய்யுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

சு. வெங்கடேசன் கடிதம்
மேலும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சு. வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், "நாட்டில் 10ஆம் வகுப்பிற்கான கல்வி 2021 பிப்ரவரி மாதமே முடிந்து விட்டது. இருப்பினும், கொரோனா 2ஆம் அலை காரணமாகத் தேர்வு முடிவுகள் தாமதமானது. கடந்த ஆகஸ்ட் 3, 2021 ல் தான் அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் முடிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் இருந்து கட்டணம்?
அதைத் தொடர்ந்து 11 வது வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் காலாண்டுக்கும், இரண்டாவது காலாண்டின் முதல் ஒன்றரை மாதத்திற்கும் சேர்த்து ரூ 3150 கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவனுக்கு ஏப்ரல் மாதம் இருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை தேவை
11ஆம் வகுப்பில் சேராத காலத்தில் டியூசன் கட்டணமாக ரூபாய் 1200, வித்யாலயா விகாஸ் நிதியாக ரூபாய் 1500, கணினி கட்டணமாக ரூபாய் 300, கணினி அறிவியல் கட்டணமாக ரூ 150 என வசூலிக்கப்பட்டு, அதற்கான ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சில பெற்றோர் என்னைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். வகுப்புகள் , கல்வி நடவடிக்கைகள் எதுவுமே இல்லாத காலத்திற்குக் கட்டணம் என்பது முறையல்ல. பெற்றோரின் புகார் முற்றிலும் நியாயமானது. ஆகவே இதில் தலையிட்டு வசூலித்த கட்டணத்தைத் திருப்பி தர வேண்டும், இல்லாவிடில் எதிர்கால கட்டணத்தில் நேர் செய்ய வேண்டும்" என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications