தமிழ் விலக்கம் எங்கேனும் நிகழக் கண்டால்... தாய்ப்புலியாகச் சீறுவோம்... சு.வெங்கடேசன் எம்.பி..!
சென்னை: அஞ்சலக படிவங்களில் தமிழ் மொழி நீக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த படிவத்தில் திருத்தம் செய்யப்பட்டு தமிழ் மொழி அச்சிடப்பட்டுள்ளது.
தபால் நிலையங்களில் பணம் சேமிப்பது, எடுப்பது உள்ளிட்ட நடைமுறைகளை பெரும்பாலும் கிராமப்புற மக்களே கடைபிடித்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்த தமிழ் மொழி படிவம் பெரிதும் உதவியாக திகழ்கிறது.
இதனிடையே இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி.,

சீறி எழுவோம்
தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை என்போம், தளர்வின்றி எந்நாளும் அதனை காப்போம் எனக் கூறியிருக்கிறார். மேலும், தமிழ் விலக்கம் எங்கேனும் நிகழக் கண்டால் தாய்புலியாய்ச் சீறி எழுந்து எம் உரிமை காப்போம் என சூளுரைத்துள்ளார். மேலும், அஞ்சலக படிவங்களை தமிழில் அச்சடிப்பதற்கான உத்தரவையும், அச்சாகவுள்ள தமிழ் படிவங்களின் மாதிரி படத்தையும் வெளியிட்டுள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி.

அஞ்சல் படிவம்
அதன் படி புதிதாக அச்சாகவுள்ள அஞ்சலக படிவத்தில், கிராமப்புற மக்களும் எளிதாக படிவத்தை நிரப்பும் வகையில் விவர சேகரிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. அஞ்சலக கணக்கு எண், பணம் செலுத்துபவரின் விவரம், கணக்கு வைத்திருப்பவரின் விவரம் உள்ளிட்ட குறிப்புகள் அந்தப் படிவத்தில் கேட்கப்பட்டிருக்கின்றன. இதேபோல் அஞ்சலக சேமிப்பு வங்கிக்கும் தனி படிவங்கள் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழி
இந்தப் படிவங்களில் தமிழ் மொழி அண்மையில் நீக்கப்பட்டதை தொடர்ந்து கடும் ஆட்சேபனை தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி., இது தொடர்பான புகாரை அஞ்சலக உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றார். தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதால் தமிழை தவிர மற்ற மொழி அறியாத பாமர மக்கள் படும் துயரத்தை எடுத்துக்கூறினார். இதையடுத்து உடனடியாக அஞ்சல் துறையில் இந்த சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக உரிமை
தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு உரிமை தொடங்கி தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் வரை சு.வெங்கடேசன் எம்.பி. தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான பல விவகாரங்களை உரிய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு பெற்று கொடுத்திருப்பதும் பாராட்டத்தக்கது.












Click it and Unblock the Notifications