”மதுரை டைடல் பார்க், வண்டியூர் கண்மாய் புனரமைப்பு” மக்களுக்கு சு.வெங்கடேசன் அளித்த முக்கிய அப்டேட்!
சென்னை: மாட்டுத்தாவணியில் அமையவுள்ள டைடல் பார்க், வண்டியூர் கண்மாய் புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் பற்றிய தகவலை மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவைக்கு பின் தொழில் வளர்ச்சியில் மதுரையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தென் மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக அமைக்கப்பட உள்ள டைடல் பார்க் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதனால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

டைடல் பார்க்
இந்த டைடல் பார்க் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் தொழில்நுட்பத்தின் முக்கிய மையமாக மாற்றவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வண்டியூர் கண்மாயை மெரினா போல மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

வண்டியூர் கண்மாய் சீரமைப்பு
எனவே இந்த கண்மாயை சீரமைத்து செயற்கை தீவு, படகு பயணம், பூங்காவில் சிறுவர் ரயில், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை உருவாக்கி சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்மாய் கரையில் அமைந்துள்ள பூங்கா புதுப்பொலிவுடன் காட்சி அளித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கோயில்களை தவிர்த்து நல்ல சுற்றுலா தலம் மதுரையில் இல்லாத குறையை, அதுபோக்கும் என்று பார்க்கப்படுகிறது.

கொட்டாம்பட்டி பேருந்து நிலையம்
இதையடுத்து கொட்டாம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள பேருந்து நிலையம் கடந்த 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்ட எல்லைகள் சந்திக்கும் பகுதியாக கொட்டாம்பட்டி இருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினசரி வந்து செல்கின்றன. இதற்கு போதிய இடவசதி உடன் கூடிய பேருந்து நிலையம் இருந்தால் பெரிதும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சு.வெங்கடேசன் ட்வீட்
இந்த திட்டங்கள் அனைத்தும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில், மதுரையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான திட்டங்களான டைடல் பார்க் புதிய தொழில்நுட்ப பூங்கா, வண்டியூர் கண்மாய் புணரமைப்பு திட்டம், கொட்டாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விரைவுபடுத்தப்படும் திட்டங்கள்
இதுகுறித்து மாண்புமிகு தமிழக முதல்வரின் செயலர்கள் மற்றும் அரசுத்துறை செயலர்களை நேற்று தலைமைச்செயலகத்தில் சந்தித்து விவாதித்தேன். திட்டப்பணிகள் நிறைவேற்றப்படுவதை விரைவுபடுத்த வலியுறுத்தினேன் என்று பதிவிட்டுள்ளார். இதனால் விரைவில் டைடல் பார்க், கண்மாய் புனரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications