நெகிழ்ச்சி..மனைவி, அம்மா-அப்பாவுக்கு கோவில் கட்டும் சின்னத்திரை பிரபலம்! இவருக்கு இப்படி ஒரு சோகமா?
சென்னை: சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் காமெடி செய்து கலக்கி வரும் மதுரை முத்து தற்போது தனது தாய் தந்தைக்கும், மனைவிக்கும் தனது பூர்வீக வீட்டின் அருகே கோவில் கட்டி வருகிறார். தற்போது கோவிலுக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.
மதுரை அருகே அரசபட்டியை சேர்ந்த மதுரை முத்து நீண்ட காலமாக காமெடி துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

அதற்குப் பிறகு சன் டிவியில் அசத்தப்போவது யாரு, சண்டே கலாட்டா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து விஜய் டிவிக்கு திரும்பிய அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்பாளராகவும் பங்கேற்று வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் பட்டிமன்ற நடுவராகவும், நகைச்சுவை பேச்சாளராகவும், திருமணங்கள், கோவில் திருவிழாக்கள், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அடிக்கடி தனது சொந்த ஊருக்கு செல்வதும், உறவினர்களை சந்திப்பதும் மதுரை முத்துவுக்கு பிடித்தமான ஒன்று. அதுமட்டுமல்லாமல் தனது மதுரை முத்து என்ற ஃபேஸ்புக் பேஜில் தனது ஊர் மற்றும் நண்பர்கள் குறித்த வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். ஆனால் மதுரை முத்துவுக்கு சோகம் நிறைந்த மறுபக்கமும் உண்டு..
மதுரை முத்து லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லேகாவுக்கு வையம்மாள் என்ற மற்றொரு பெயரும் உண்டு.. தீவிரமான காளி பக்தையாக அவர் இருந்தார். மதுரையில் நடந்த மேடை நிகழ்ச்சி ஒன்றில் முதன்முதலாக சந்தித்த நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினருக்கு இரு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று கணவருக்காக சிறப்பு பூஜை செய்து மீண்டும் வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி லேகா உயிரிழந்தார்.
அப்போது அமெரிக்காவுக்கு சென்ற மதுரை முத்து உடனடியாக ஊர் திரும்பினார். அவரது இரு பெண் குழந்தைகளும் அம்மா எங்கே எனக் கேட்டபோது ’கோவிலுக்கு போயிருக்காங்க திரும்பி வருவாங்க’ என சொல்லி சமாளித்ததாக பலமுறை அவரே பகிர்ந்து இருக்கிறார். இரு குழந்தைகள், வயதான பெற்றோர் என தவித்த முத்து, நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க லேகாவின் தோழியான நீத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் முத்து தனது சொந்த ஊரான அரசபட்டிக்கும் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். பிசியான தொழில் முறை இருந்தாலும், தனது ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் முத்து தற்போது நெகிழ்ச்சி தரும் செயல் ஒன்றை செய்திருக்கிறார். தனது சொந்த ஊரில் வீட்டின் அருகே தனது தாய் தந்தைக்கும், உயிரிழந்த மனைவி லேகாவுக்கும் கோயில் ஒன்றை கட்டி வருகிறார். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை பார்வையிட்ட முத்து அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்.
மதுரை முத்துவின் தந்தை அந்த காலத்தில் ஊர் நாட்டாமையாக இருந்தவர். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நாட்டாமை முறை ஒழிக்கப்பட்டு கிராம நிர்வாக அதிகாரி பணி கொண்டுவரப்பட்டது. பதவி இல்லாவிட்டாலும் மதுரை முத்துவின் தந்தையை அப்பகுதி மக்கள் மிகுந்த மரியாதையோடு பேசி வந்திருக்கின்றனர். தன் மகன் வாழ்வில் முன்னேறாமல் போய்விடுவானோ என தந்தை வருந்திய நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியரே, நீங்கள் மதுரை முத்துவின் அப்பாவா என கேட்டதாகவும், அதன் பின்னர்தான் தனது தந்தைக்கு தன் மீது நம்பிக்கை வந்ததாகவும் மதுரை முத்து பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் பெற்றோரையும், உயிரிழந்த மனைவியையும் மறக்காமல் அவர்களுக்கு கோவில் கட்ட முடிவெடுத்து அந்த பணிகளை துவக்கி இருக்கும் நிலையில் பலரும் மதுரை முத்துவை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications