மதுரையில் ஒருநாள்.. வெறும் 2 மணி நேரத்தில் சென்னைக்கு சென்ற "இதயம்".. திக்திக் பயணம்! எப்படி நடந்தது
சென்னை: மதுரையில் இருந்து சென்னைக்கு இதயம் ஒன்று வெறும் 2 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
2008ல் சென்னையில் ஹித்தேந்தர் என்ற இளைஞரின் இதயம் அபிராமி என்ற சிறுமிக்கு பொருத்தப்பட்டது பலருக்கும் நினைவு இருக்கலாம். 2008ல் பைக் விபத்தில் மூளை சாவு அடைந்தார் ஹித்தேந்தர்.
இவரை காப்பாற்ற முடியாது என்று தெரிந்த நிலையில் அவரின் உடல் பாகங்களை தானம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மூலம் சாவு அடைந்தாலும் இதயத்துடிப்பு மட்டும் இருந்தது.

இதயம்
அதே சமயம் அபிராமி என்ற 9 வயது சிறுமிக்கு இன்னொரு மருத்துவனையில் இதயம் தேவைப்பட்டது. இதையடுத்து அந்த சிறுமிக்கு இதயத்தை தானமாக கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது. ஹித்தேந்தர் பெற்றோரின் இந்த முடிவை தொடர்ந்து அந்த சிறுமிக்கு ஹித்தேந்தர் இதயம் கொடுக்கப்பட்டது. இதற்காக 45 நிமிடம் பயணம் போலீசாரின் உதவியுடன் 11 நிமிட பயணமாக சுறுக்கப்பட்டது. போலீசார் இதற்காக உருவாக்கிய கிரீன் காரிடார் எனப்படும் டிராபிக் இல்லாத பயணம் பெரிய அளவில் கவனம் பெற்றது. இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்து ஹித்தேந்தர் இதயம் வெற்றிகரமாக அபிராமிக்கு பொருத்தப்பட்டது.

இதயம் மாற்று
ஆனால் அதன்பின் 1 வருடம் கழித்து அபிராமி வயிற்றில் ஏற்பட்ட வேறு நோய் காரணமாக மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அதே போன்ற ஒரு சம்பவம் மதுரையில் நடைபெற்று உள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு இதயம் ஒன்று வெறும் 2 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் அந்த நோயாளி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக சுயநினைவை இழந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை
இதையடுத்து அவருக்கு நேற்று முதல்நாள் மூளை சாவு ஏற்பட்டது. ஆனால் அவரின் இதயம் உட்பட மற்ற உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து அவரின் இதயத்தை வேறு நோயாளிக்கு பொறுத்த முடிவு செய்யப்பட்டது. சென்னையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு நோயாளிக்கு உடனே இதயம் தேவைப்பட்டது. அவருக்கு அவசரமாக இதயம் தேவைப்பட்டதால் மதுரை நோயாளியின் இதயம் இவருக்கு பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மரணம் அடைந்தவரிடம் இருந்து அறுவை சிகிச்சை இதயம் எடுக்கப்பட்டது.

இதயம்
பின்னர் அந்த இதயம் விமானம் மூலம் பாதுகாப்பாக மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதயம் நீண்ட நேரம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அது வீணாகும் அபாயம் உள்ளது. இதனால் முடிந்த அளவு இதயத்தை வேகமாக கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு இந்த இதயம் வந்ததும் உடனடியாக சென்னை காவல் துறையின் உதவியுடன் கிரீன் காரிடர் அமைக்கப்பட்டது. கிரீன் காரிடர் என்பது மிகவும் இக்கட்டான நேரங்களில் உருவாக்கப்படும் சாலை போக்குவரத்து ஆகும்.

கிரீன் காரிடர்
இது போன்ற நேரங்களில் மொத்தமாக சாலையில் எதிர் திசையில் வாகனம் எதுவும் வராது. அதோடு ஒரு குறிப்பிட்ட வாகனம் செல்லும் திசையில் வேறு வாகனங்கள் உடன் வராது. அந்த அளவிற்கு நேற்று மொத்தமாக சாலைகள் அடைக்கப்பட்டு கிரீன் காரிடர் உருவாக்கப்பட்டது. பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு 10 நிமிடத்திற்கு உள்ளாக இதயம் காரில் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 2 மணி நேரத்தில் இதயம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த இதயம் அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு பொருத்தப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை,












Click it and Unblock the Notifications