அரசுப் பள்ளிக்கு மேலும் ரூ. 3.5 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பூரணம்மாள்.. குவியும் பாராட்டு
சென்னை: அரசுப்பள்ளிக்கு 7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்து முதல்வரின் சிறப்பு விருதை பெற்ற பூரணம்மாள் தற்போது மேலும் 91 செண்ட் நிலத்தை அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொடிக்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் பணியாற்றி வரும் பூரணம்மாளுக்கு ஜனனி என்ற மகள் இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகள் இறந்து விட்டார். மகள் இறக்கும் தருவாயில் இருந்த போது, தங்களுக்கு சொந்தமான நிலத்தை ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு மகள் கூறியுள்ளார்.

இதன்படி, கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார் பூரணம்மாள். அரசுப் பள்ளிக்கு நிலத்தை தானமாக அளித்த பூரணம்மாளுக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்தன. தமிழக முதல்வர் ஸ்டாலினும் பூரணம் அம்மாளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும், குடியரசு தின விழாவில் முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, குடியரசு தின விழாவில் முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மதுரை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு மேலும் 91 செண்ட் நிலத்தை பூரணம் அம்மாள் தானமாக அளித்துள்ளார்.
இந்த நிலத்தின் மதிப்பு ரூ.3.5 கோடி என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய நிலையில் தற்போது மேலும் 91 செண்ட் நிலத்தை பூரணம்மாள் அரசுப்பளிக்கு அளித்துள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications