மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் கைவிடப்பட தமிழக அரசுதான் காரணம்: ரயில்வே அமைச்சர்
சென்னை: தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

அப்போது, நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திட்டம் வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் காரணமாக இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது.
ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அம்ரித் பாரத் ரயில்களுக்காக ஒவ்வொரு ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும். அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் ரயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் பாம்பன் பாலம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்று சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த பாலமும் திறந்து வைக்கப்படும். அதேபோன்று ஜம்மு காஷ்மீர் இடையே வந்தே பாரத் ரயில் பாதை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் அங்கு ரயில் இயக்கப்படும்.
அனைத்து தரப்பு மக்களுக்குமான சிறப்பான ரயில் சேவையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கி வருகிறது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் பெட்டிகளின் உள்கட்டமைப்பு வசதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 10,000 ரயில் எஞ்சின்களில் 'கவாச்' தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை 76 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications