எழுந்த எதிர்ப்பு.. மதுரவாயல் ம.நீ.ம வேட்பாளர் பத்ம பிரியா வேட்புமனு நிறுத்தி வைத்து ஏற்பு.. பரபரப்பு
சென்னை: சென்னை மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் பத்மபிரியா வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு தீவிர பரிசீலனைக்கு பிறகு ஏற்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.
பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திடீர் பரபரப்புகள்
இப்படித்தான் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நெல்லை நிலவரம்
நெல்லையை பொறுத்த அளவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி வேட்பாளர் பால்பாண்டியன் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாற்று வேட்பாளர் ஒருவர் வேட்புமனு ஏற்கப்பட்டதால் அந்த கட்சி போட்டியிடுவது உறுதியானது.
மதுரவாயல் நிலவரம்
இதேபோல ஒவ்வொரு தொகுதிகளிலும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகளை வேட்பாளர்கள் எதிர்கொள்கிறார்கள். சென்னை மதுரவாயல் தொகுதி ம.நீ.ம வேட்பாளர் பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் பெயரை தனது வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என்பதால் அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், வேட்புமனுவில் பிழைகள் இருப்பதாக தமிழ்நாடு இளைஞர்கள் கட்சி ஆட்சேபணை தெரிவித்ததால் வேட்புமனு நிறுத்தப்பட்டதாம்.
பிரபலம்
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் தீவிர பரிசீலனை நடத்தினர். பத்ம பிரியா கூறிய விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அவரது வேட்புமனுவை ஏற்றனர். இளம் பெண் வேட்பாளரான அவர் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக நிறைய மக்களால் அறியப்படுபவர். அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.