யோசித்து பேசுங்கள் விஜய் சேதுபதி.. தமிழிசையை தொடர்ந்து மாஃபா பாண்டியராஜனும் எதிர்ப்பு!
காஷ்மீர் குறித்த நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துக்கு அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: காஷ்மீர் குறித்த நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துக்கு அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும், அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக தமிழகத்தில் பலர் கருத்து கூறி வருகிறார்கள்.இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து கூறினார்.
அதில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது .
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மிகுந்த மன வருத்தம் தருகிறது என்று மிகவும் உருக்கமாக பேட்டி அளித்து இருந்தார். இந்த நிலையில் அவரின் இந்த கருத்துக்கு அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதில், விஜய் சேதுபதி நன்றாக ஆராய்ந்து நடிக்க கூடியவர். தேர்ந்தெடுத்து கதைகளை அவர் நடிக்க கூடிய நபர். அதேபோல்தான் அவர் பேசும் போதும் தேர்ந்தெடுத்து பேச வேண்டும்.
காஷ்மீர் விவகாரத்தில் அதன் பின்புலத்தைத் தெரிந்துகொண்டு நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவிக்க வேண்டும். அவர் பேசுவதற்கு முன் யோசித்து பேசுவதுதான் சரியாக இருக்கும். பிரபலங்கள் காஷ்மீர் விவகாரத்தில் பேசினால் கவனமாக பேசுவதே நல்லது. அவர் ஆழ்ந்து யோசித்து பேசி இருக்கலாம் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.